மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் லேசான மழை.. மீட்பு பணிகளில் சிக்கல்
Recommended Video
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில் லேசான மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ- கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித் வில்சன். இவர் நேற்று முன் தினம் அவரது வீட்டில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் அங்கு மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார். அவரை மீட்கும் பணிகள் 3-ஆவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. குழந்தை விழுந்த இடத்துக்கு பக்கவாட்டில் ரிக் இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று நடுகாட்டுப்பட்டியில் மழை பெய்தது. இதனால் மழை நீர் பள்ளத்தில் செல்லாமல் இருக்க குழியை தார்பாய் கொண்டு மூடினர். அதுவும் இன்றும் மழை வந்தால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
மேலும் வங்கக் கடலில் புதிய காற்றழுத்தம் ஏற்பட்டுள்ளதால் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று மழை பெய்யுமா என்பது குறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வரும் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் இன்று மழைக்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளது.
இதனால் மக்களும் மீட்பு படையினரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இன்று மாலைக்குள் குழி தோண்டும் பணி முடிவடையும் என்பதால் இன்று சுஜித் மீட்கப்படலாம் என கூறப்படுகிறது.
மழை பெய்யாது என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் நடுக்காட்டுப்பட்டியில் லேசான மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.