அட.. நாங்க என்னப்பா ஊழல் பண்ணிட்டோம்.. எங்கே சொல்லு.. திருச்சியில் வைத்து வெளுத்த எடப்பாடியார்!
திருச்சி பிரச்சாரத்தில் திமுகவை சரமாரியாக விமர்சித்தார் முதல்வர் எடப்பாடியார்
திருச்சி: "என்னப்பா நாங்க அப்படி ஊழல் பண்ணிட்டோம்.. சொல்லு.. இவங்க போய் எங்க மேல ஆளுநர்கிட்ட மனு தர்றாங்க.. வேடிக்கையை பார்த்தீங்களா" என்று திருச்சி பிரச்சாரத்தில் திமுகவை சரமாரியாக விமர்சித்து பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்... அந்த வகையில் திருச்சி மாவட்டம், திருவெறும்பூரிலும் பிரசாரம் செய்தார்.
இந்த பிரச்சார கூட்டத்தில் திமுகவை சரமாரியாக விமர்சித்துபேசிய முதல்வர், அதிமுகவின் சாதனைகளை லிஸ்ட் போட்டு வாக்கு கேட்டார். கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது:
ரவுடித்தனம்
"திமுக ஒரு அராஜக கட்சி.. ரவுடித்தனம் செய்யும் கட்சி என்பது எல்லாருக்கும் தெரியும்... எப்படியாவது இந்த தேர்தலில் தில்லு முல்லு செய்து வெற்றி பெறலாம் என்று வியூகம் வகுத்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு.. நாம் எவ்வித இடமும் தராமல் எச்சரிக்கையாக பணியாற்ற வேண்டும்... நாடாளுமன்ற தேர்தலில் நிறைவேற்ற முடியாத, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, வாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனார்கள்... ஆனால், எம்பிக்களாகி இதுவரை தமிழகத்திற்கு என்ன செய்திருக்கிறார்கள்? ஒன்னும் கிடையாது.
தொழிற்சாலைகள்
தமிழகத்திற்கு இதுவரை கூடுதலாக நிதி ஏதாவது பெற்று தந்திருக்கிறார்களா? புதிய தொழிற்சாலைகள் வருவதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தார்களா? ஒன்னும் கிடையாது.. பதவிக்கு வரும் வரை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பொய் பேசுவாங்க.. அதுவும் திமுக தலைவர் முக ஸ்டாலின் இருக்கிறாரே.. பொய் பேசுவதில் ரொம்ப வல்லவர்.. பொய் பேசுவதற்கு நோபல் பரிசுதான் தரணும்.. அவருக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும்.
ஊழல்
அதிமுக ஆட்சியில் ஊழல் நடந்துவிட்டதாக இவர்கள் சொல்லுகிறார்கள்.. எப்படி இருக்கு பாருங்க.. என்னப்பா ஊழல் நடந்தது? சொல்லு என்னன்னு.. தேய்ஞ்சி போன ரிக்கார்டு மாதிரி அதையே சொல்லிட்டு இருக்காங்க.. ஆனால், இவங்க அதிமுகவை பற்றி புகார் மனுவை ஆளுநரிடம் கொண்டு போய், துரைமுருகன் உட்பட ஒரு படையோடு சேர்ந்து போய் மனு தர்றாங்க.. ரத்து செய்த டெண்டர் மேல எப்படிங்க ஊழல் பண்ண முடியும்? இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிட்டு இருக்காங்க..
வாரிசு அரசியல்
தேர்தல் வந்தாலே இப்படித்தான் பேசுவாங்க.. ஆனால், தேர்தல் வந்தாலும், வராவிட்டாலும் மக்களுக்காக உழைப்பது அதிமுகதான்.. இந்த தேர்தலில் உங்கள் வாக்குகள் மூலம் வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும். நல்ல ஆட்சி தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள். விவசாயிகளின் நலன் காக்க டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக நான் அறிவித்துள்ளேன். ஆனால் மீத்தேன் போன்ற திட்டங்களுக்கு ஒப்பந்தம் போட்டவர் ஸ்டாலின்தான். அதை தடுத்து நிறுத்தியது அதிமுக அரசு..
ஸ்டாலின்
செஞ்சது எல்லாமே அவங்கதான்.. பழி மட்டும் நம்ம மேல போடறாங்க.. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஸ்டாலின் மற்றும் திமுகவினரால் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.. ஆனால் அந்த மனுக்கள் எங்கே போனது? உரிய அரசு அதிகாரிகளிடம் சேர்த்தார்களா, இல்லையே? மக்களை ஏமாற்றுவதற்காக இதுபோன்ற நடவடிக்கைகளில் திமுகவினர் ஈடுபட்டு வருகிறார்கள்.. அதன்பிறகு எல்லோரும் நம்முடன் என்று ஒரு அமைப்பை நடத்தினார்கள். அதில் திமுகவினர் வாக்காளர் பட்டியலை எடுத்துக் கொண்டு, அவர்களின் விருப்பம் இல்லாமலே எல்லோருடைய பெயரையும் இணையதளத்தில் இணைத்துக்கொண்டார்கள்...
வாரிசு அரசியல்
திமுகவில் வாரிசு அரசியல் மட்டும் அல்ல, அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி ஆகிவிட்டது... அதை இனிமேல் ஒரு கட்சி என்று அழைப்பதைவிட கார்ப்பரேட் கம்பெனி என்பதுதான் சரியா இருக்கும். இப்படிப்பட்ட கம்பெனி தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வரலாமா என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். உழைக்கின்றவர்கள் வர வேண்டும், நாட்டு மக்களுக்கு நன்மை செய்பவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும். மக்களாகிய நீங்கள் நீதிபதியாக இருந்து நடுநிலை தவறாமல் மீண்டும் அதிமுக ஆட்சியை தொடர வழி செய்ய வேண்டும்" என்றார்.