திருச்சியில் பொதுமக்களின் புகார்களுக்கு உள்ளான 80 போலீசாருக்கு அதிரடி 'நடத்தை சிகிச்சை'
திருச்சி: சாத்தான்குளம் சம்பவங்களைத் தொடர்ந்து திருச்சியில் பொதுமக்களின் புகார்களுக்கு உள்ளான 80 போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
சாத்தான்குளம்: மாஜிஸ்திரேட்டை அவமதித்ததாக ஏஎஸ்பி, டிஎஸ்பி காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
மாஜிஸ்திரேட்டுக்கு மிரட்டல்
அத்துடன் இதனை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, மாஜிஸ்திரேட் பாரதிதாசனை நியமித்தது. மாஜிஸ்திரேட் என்றும் பாராமல் போலீசார் அவரையும் ஒருமையில் விமர்சித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. அந்த போலீஸ்காரர் மகாராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அடுத்தடுத்து போலீஸ் மீது நடவடிக்கை
இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தூத்துக்குடி போலீஸ் உயர் அதிகாரிகள் குமார், பிரதாபன் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராக உள்ளனர். இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் சமூக வலைதளங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிக்கிய 80 திருச்சி போலீஸ்
இந்த நிலையில் திருச்சி போலீஸ் சரகத்தில் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக 80 போலீசார் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த 80 போலீசாருக்கும் உரிய நடத்தை தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் பணியில் சேர்க்கப்படுவார்கள் என்றும் டிஐஜி பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
போலீஸ் நண்பர்கள் குழு
மேலும் போலீஸ் நண்பர்கள் குழு என்ற பெயரிலான தன்னார்வலர்களின் நடவடிக்கைகளும் கடும் விமர்சனங்களுக்குள்ளாகி இருக்கிறது. பொதுமக்களிடம் மிகவும் மோசமாக அத்துமீறி இந்த அமைப்பினர் நடந்து கொள்கின்றனர் என்பது குற்றச்சாட்டு. இந்த அமைப்பின் செயல்பாடுகளைக் கண்டித்து திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.