திருச்சி டூ சிவகங்கை... வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு... நெகிழ்ந்து போன ப.சிதம்பரம்
திருச்சி: திருச்சியில் இருந்து கார் மூலம் சிவகங்கை சென்ற ப.சிதம்பரத்துக்கு வழிநெடுகிலும் காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்து அசத்தி விட்டனர்.
திருச்சி முதல் சிவகங்கை மாவட்ட எல்லை வரை காங்கிரஸ் நிர்வாகிகள் அளித்த வரவேற்பு ப.சிதம்பரத்தை நெகிழச்செய்துவிட்டதாம்.
தன் மீதான கைது நடவடிக்கை கட்சிக்கு உரம் அளித்துள்ளதாகவும், நிர்வாகிகள் மத்தியில் எழுச்சியை காண முடிவதாகவும் ப.சிதம்பரம் தனக்கு நெருக்கமானவர்களிடம் சிலாகித்துள்ளார்.
உற்சாக வரவேற்பு
சிவகங்கை மாவட்ட மண்ணின் மைந்தரான ப.சிதம்பரம் திஹார் சிறையில் 106 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் முதல்முறையாக இன்று அங்கு சென்றுள்ளார். சென்னையில் இருந்து விமானத்தில் திருச்சி சென்ற அவர், அங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டை வழியாக சிவகங்கை சென்றார்.
மேளதாளம் முழங்க
ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் கீரனூரில் தொடங்கி சிவகங்கை மாவட்ட எல்லை வரை அவருக்கு தடபுடல் வரவேற்பு அளித்தனர். மேளதாளம் முழங்க, இசை வாத்தியங்களுடன் ஆதரவாளர்களும், நிர்வாகிகளும் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட சிதம்பரம் சில இடங்களில் காரை விட்டு கீழிறங்கி 200 அடி வரை நடந்தே சென்று அனைத்து நிர்வாகிகளையும் பார்த்துள்ளார்.
கார்த்தி ஏற்பாடு
திஹார் சிறைவாசலில் ப.சிதம்பரத்தை வரவேற்க தமிழகத்தில் இருந்து பெரியளவில் யாரும் செல்லாத குறையை இந்த வரவேற்பு வைபவங்கள் நிறைவு செய்துள்ளன. நிர்வாகிகள் எழுச்சியுடன் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் இப்படி இருக்கும் வரை காங்கிரஸை யாராலும் அழிக்க முடியாது எனவும் சிவகங்கையில் சிலாகித்து நெகிழ்ந்துள்ளார் ப.சி.
ப.சி.செயல்பாடு
சிறைவாசத்துகு பின்னர் ப.சிதம்பரத்தின் செயல்பாடுகளில் மிகுந்த மாற்றம் தென்படுவதாக கூறுகிறார் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய நிர்வாகி ஒருவர். நேற்று சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடையிலும் அது வெளிப்பட்டதாக அவர் தெரிவித்தார்.