"பெண் என்றால் ஆபாச அணுகுமுறை.. கேரக்டரை சிதைக்கலாம்.. தப்புக் கணக்கு போடாதீங்க".. ஜோதிமணி எச்சரிக்கை
பாஜகவினர் அரசியல் நாகரீகம் கற்று கொள்ள வேண்டும் என்று ஜோதிமணி தெரிவித்துள்ளார்
திருச்சி: "பெண் என்றால் ஒரு ஆபாச அணுகுமுறை.. ஒரு பெண்ணை அவருடைய கேரக்டரை சிதைப்பதன் மூலம் பொதுவெளியில் இருந்து வெளியேற்றி விடலாம் என்று பிஜேபி நினைக்குமானால் அவர்கள் ஆபாச அரசியல் என்னிடம் வெற்றியடையாது.. நாகரீக அரசியலை கற்றுக் கொள்ளாத வரை பாஜகவினர் கலந்து கொள்ளும் எந்த விவாதங்களிலும் நான் கலந்து கொள்ளப் போவதில்லை" என்று எம்பி ஜோதி ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
தற்போதைய சூழலில், டிவி சேனல்களில் விவாத நிகழ்ச்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.. தினந்தோறும் தமிழகம் சந்திக்கும் பிரச்சனைகளை, ஆரோக்கியமான விவாதமாக நடத்தி, அதன்மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை கொண்டு சேர்ப்பதும், மக்களை தெளிவுபடுத்துவதும் அவசியமாகிறது.
அந்த வகையில், நேற்று மாலை நியூஸ் 7 டிவியில் விவாத நிகழ்ச்சி நடந்தது.. இதில், திமுகவின் எம்பி கலாநிதி வீராசாமி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, பாஜகவின் கரு நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விவாதத்தின் துவக்கத்திலேயே கரு நாகராஜன், ஜோதிமணியை மிக இழிவான வார்த்தைகளை சொல்லி குறிப்பிட்டார். இதையடுத்து, ஜோதிமணி அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி.. அவரை தொடர்ந்து கலாநிதியும் வெளியேறினார்.
டிவி விவாதத்தில் காங். எம்.பி. ஜோதிமணியை இழிவாக விமர்சிப்பதா? காங். தலைவர்கள் கண்டனம்- பாஜக பதில்
ஜோதிமணி
பொதுவெளியில், ஒரு பெண் என்றும் பாராமல், எம்பி என்றும் பாராமல், நாகராஜன் தடித்த வார்த்தைகளை ஜோதிமணிமீது பிரயோகித்தது கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. ஜோதிமணிக்கு ஆதரவான ஹேஷ்டேக்குகளும் டிரெண்டாகி வருகின்றன. தற்போது இதுகுறித்து ஜோதிமணி ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் சொல்லி உள்ளதாவது:
கரு.நாகராஜன்
"நேற்று நியூஸ் 7 தமிழின் கேள்வி நேரம் விவாதத்தில் இருந்து பாஜகவின் கரு. நாகராஜன் என்கிற மூன்றாந்தரமான மனிதரின் தரம்கெட்ட பேச்சால் வெளியேறினேன். புலம் பெயர்த்தொழிலாளர்களின் வேதனையை பட்டியலிட்டு அரசு செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பினேன். தொடர்ந்து 45 நாட்களாக களத்தில் நிவாரணப் பணியில் இருந்து மக்களின் பசியை, வறுமையை, கண்ணீரை, வேதனையை,வலியை பக்கத்தில் இருந்து பார்ப்பதால் கடந்த சில தினங்களாக மக்களின் வேதனையை ஊடகங்களின் வழியே வெளிப்படுத்தி வருகிறேன்.
கசப்பான உண்மை
பிரதமர் மோடி அரசு மக்களை எப்படி இரக்கமற்று கை கழுவி விட்டது என்பதை மக்களின் குரலாக பதிவு செய்து வருகிறேன். என்னை ,நான் கூறும் கசப்பான உண்மையை எதிர்கொள்ள பாஜகவினரால் முடியவில்லை. கரு.நாகராஜன் என்னை மிகத் தரக்குறைவாக மலிவான வார்த்தைகளில் ஒருமையில் விமர்சிக்கத் தொடங்கினார். நான் தொடர்ந்து அந்த விவாதத்தில் பங்கேற்க விரும்பாமல் வெளியேறினேன்.
கலாநிதி வீராசாமி
திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமியும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். ஊடக விவாதங்களில் பாஜகவினர் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்ளும் போக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஊடகங்களையும், நெறியாளர்களையும் , எதிர்க்கட்சிகளையும் மிரட்டியே பணிய வைக்கலாம் என்று எண்ணுகின்றனர். பெண் என்றால் கூடுதலாக ஒரு ஆபாச அணுகுமுறை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஊடகங்களும் பாஜகவின் இந்தப் போக்கை அனுமதிக்கக் கூடாது.
ஆபாச வாட்ஸ்அப் குழு
பாஜக என்னிடம் இப்படி ஆபாசமாக நடந்துகொள்வது முதல்முறையல்ல. இதற்கு முன்பு இதேபோல பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மோடியையும்,பிஜேபியையும் தோலுரித்தேன் என்பதால் என்னை ஒரு ஆபாச வாட்ஸ் அப் குழுவில் இணைத்து என்னை அசிங்கப்படுத்த முயன்றார்கள். இதில் அசிங்கப்படவேண்டியது பிஜேபிதான் என்று வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷாட்டுகளை பொதுவெளியில் வெளியிட்டு பிஜேபியின் ஆபாச அரசியலை வெளிப்படுத்தினேன்.
அதிர்ந்த தமிழகம்
தமிழகமே அதிர்ந்தது #IStandwithJothimani லட்சக்கணக்கானவர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது. ஊடகங்கள் பிஜேபியை மேலும் தோலுரித்தன. பிஜேபி பொதுவெளியில் அசிங்கப்பட்டு நின்றது. அந்த வழக்கு இன்னும் நடந்துகொண்டிருக்கிறது. ஒரு பெண்ணை அவருடைய கேரக்டரை சிதைப்பதன் மூலம் பொதுவெளியில் இருந்து வெளியேற்றி விடலாம் என்று பிஜேபி நினைக்குமானால் அவர்கள் ஆபாச அரசியல் என்னிடம் வெற்றியடையாது.
புதுமை பெண்கள்
என் போன்ற பெண்கள் முறத்தால் புலி விரட்டிய வீரத்தமிழச்சியின் அம்சம்.. "நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் " கொண்ட பாரதியின் கண்ட புதுமைப் பெண்ணின் வம்சம். பிரதமர் முதல் பிஜேபியின் கரு. நாகராஜன் போன்ற பிஜேபியின் மூன்றாம் தர பேச்சாளர்கள் வரை எதிர்க்கட்சியினரை, ஊடகங்களை ஒடுக்க ஆபாச அரசியலை முன்னெடுக்கலாம். பெண்களை ஆபாசமாகப் பேசுவது, கொலை, பாலியல் வன்புணர்வு மிரட்டல் விடுவதுமான செயல்பாடுகளை செய்பவர்களை ஊக்குவிக்க சமூக வலைத்தளங்களில் பிரதமர் அவரை பின் தொடரலாம் (இது குறித்து ஸ்வாதி சதுர்வேதி விரிவாக ஒரு புத்தகமே எழுதியுள்ளார்)
விவசாய குடும்பம்
ஆனால் நான் களத்தில் இருந்து நேர்மையோடும்,அன்போடும், கண்ணியத்துடனும் அரசியல் செய்ய வந்தவள். ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் 25 ஆண்டுகளாக கரடுமுரடான பாதையினைக் கடந்து நாடாளுமன்றத்தில் கால் பதித்தவள். எனது நேர்மையை இந்த உலகறியும். அதனால் தான் எனது கரூர் தொகுதி மக்கள் எனது தேர்தலை தாங்களே களம் கண்டதாக கொண்டாடினார்கள்.எனது வெற்றி தங்கள் குடும்பத்துப் பெண்ணொருத்தியின் வெற்றியெனெ 4,50,000 வாக்கு வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை அளித்தார்கள்.
அதிர்ச்சி
இந்த வெற்றி எனது வெற்றியல்ல. சாமானிய மக்களின் வெற்றி என்பதை நான் உணர்ந்துள்ளேன். பொதுவாழ்வை உண்மை, நேர்மை, அன்பின் வழியே ஒரு தவமென வாழ்கிறேன். இதை உலகறியும்.
இம்மாதிரியான விமர்சனங்களினால் பெண்களை முடக்கிவிட முடியும் என நினைக்கும் பிஜேபி தான் முடங்கிப் போகும். இன்றைய விவாதத்தின் தரத்தை கரு.நாகராஜன் சிதைத்த பிறகும் அவரை நியூஸ் 7 தமிழ் பேச அனுமதித்தது அதிர்ச்சியளிக்கிறது.
கலந்து கொள்ள மாட்டேன்
நாகரீக அரசியலை கற்றுக் கொள்ளாத வரை பாஜகவினர் கலந்து கொள்ளும் எந்த விவாதங்களிலும் நான் கலந்து கொள்ளப் போவதில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னோடு நிற்கும் அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்"என்று ஜோதிமணி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.