லலிதா ஜுவல்லரியை பார்வையிட்ட திருநாவுக்கரசர் எம்.பி...!
Recommended Video
திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரியில் ரூ.13 கோடி மதிப்புள்ள நகைகள் நேற்று கொள்ளையடிக்கப்பட்டுள்ள நிலையில் திருநாவுக்கரசர் எம்.பி. அந்தக்கடைக்கு சென்று கொள்ளை நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார்.
திருச்சி சத்திரம் பேருந்துநிலையம் பகுதியானது 24 மணி நேரமும் ஆள்நடமாட்டம் உள்ள பகுதியாகும். நகரின் முக்கிய இடத்தில் அமைந்துள்ள லலிதா ஜுவல்லரியில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் திருச்சி மக்களை பீதியில் உறைய வைத்தது. காவல்துறையின் பாதுகாப்பு எந்தளவுக்கு உள்ளது என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துவதாக திருச்சி முழுவதும் மக்கள் நேற்று விவாதித்தனர். முடிதிருத்தகம் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை இதே பேச்சாகத் தான் இருந்தது.
இந்நிலையில் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர், தனது தொகுதியில் நிகழ்ந்த மிகப்பெரிய கொள்ளைச்சம்பவம் என்பதால் லலிதா ஜுவல்லரியை நேரில் பார்வையிட நேற்றிரவு சென்றார். மேலும், கொள்ளையர்களை பிடிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
கொள்ளை நடந்தது பற்றியும், கொள்ளைபோன நகைகள் மற்றும் அதன் மதிப்பீடுகள் பற்றியும் திருச்சி லலிதா ஜுவல்லரி மேலாளர் திருநாவுக்கரசர் எம்.பி.யிடம் விளக்கினார். காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் என்றும், கொள்ளையர்களை விரைந்து பிடிப்பார்கள் எனவும் ஊழியர்களிடம் திருநாவுக்கரசர் எம்.பி.தெரிவித்தார்.
இதனிடையே, மக்கள் பிரச்சனை என்றால் திருநாவுக்கரசர் எம்.பி.இப்படி ஓடி வந்திருப்பாரா என்றும், கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஒரு பாதிப்பு என்றவுடன் அவர் ஓடோடிச் சென்று பார்வையிடுகிறார் எனவும் திருச்சி அதிமுகவினர் கேள்வி எழுப்புகின்றனர்.