கொரோனாவால் வாழ்வு.. சொந்த ஜாமினில் திருச்சி மத்திய சிறையில் இருந்து 125 கைதிகள் விடுதலை
திருச்சி: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சொந்த ஜாமினில் திருச்சி மத்திய சிறையில் இருந்து 125 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ பாதிப்பில் இருந்து பாதுகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இந்திய நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள கைதிகளை விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்த நிலையில் சிறு குற்ற வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் திருச்சி மத்திய சிறையில் இருந்து 6 விசாரணை கைதிகள் நேற்று சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்கள். திருச்சி மத்திய சிறையில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர்கள் கைதிகளாக சிறையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று மத்திய சிறையில் இருந்து சொந்த ஜாமீனில் 125 பேர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.
சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்கள் வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு ஆஜராக தவறினால் ஒவ்வொரு நபருக்கும் ரூ 15 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.