வாழை அறுவடை.. வெளி மாநிலங்களுக்கு வாழைக்காய் லோட் அனுப்ப அனுமதி.. அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
வாழை அறுவடை நடைபெறுவதால் வாகனங்களில் வாழைக்காய் ஏற்றி வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சி: வாழை அறுவடை நடைபெறுவதால் வாகனங்களில் வாழைக்காய் ஏற்றி வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை கொரோனா நோய் சம்பந்தமாக சுகாதார துறை மற்றும் பல்வேறு துறை அலுவலருடன் அமைச்சர்கள் வெல்லமண்டி என்.நடராஜன், வளர்மதி ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மாநகர காவல்துறை ஆணையர் வி. வரதராஜு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், முசிறி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பரமேஸ்வரி முருகன், திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், சுகாதார துறை குடும்ப நல இணை இயக்குநர் டாக்டர் கோபிநாத், சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர் சுப்ரமணி, அரசு மருத்துவகல்லூரி முதல்வர் டாக்டர் வனிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர் மற்றும் அரசு அலுவலர் கலந்து கொண்டார்கள்.
பின்னர் கூட்டத்தில் கொரோனா வைரஸ நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டது.
பின்னர் மாநில சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது : உலகில் உள்ள 195 நாடுகளில் 186 நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலக நாடுகள் முடங்குகின்ற நிலையில் உள்ளது. நமது நாட்டில் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் கொரோனா வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்துகின்ற நிலையில் உள்ளோம்.
தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிக்காத வகையில் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கு அனைவரும் தனித்து இருந்து அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.மாவட்டத்தில் உள்ள 41 வருவாய் வட்டங்களில் சுசுாதார துறையினர், வருவாய் துறையினர், உள்ளாட்சி துறையினர், காவல் துறையினர் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். இவர்கள், சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் விவரங்களை சேகரித்து அவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் தற்போது வாழை அறுவடை நடைபெறுவதால் வாகனங்களில் வாழைக்காய் ஏற்றி வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி வழங்கியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகள் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 4120 பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்று ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் முடிவடைந்தது. இவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட நபர் அரசின் விதிமுறைகள் பின்பற்றாமல் வெளியே நடமாடினால் அவர்களது பாஸ்போர்ட் முடக்கப்பட்டு குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருச்சி மாவட்டத்தில் 36 இடங்களில் சமுதாய கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மாநகராட்சி பகுதியில் மூன்று இடங்களும், நகராட்சி பகுதியில் மூன்று இடங்களிலும், பேரூராட்சி பகுதியில் 16 இடங்களிலும், ஊராட்சி ஒன்றிய பகுதியில் 14 இடங்களிலும் ஆக மொத்தம் 36 இடங்களில் சமுதாய கூடம் அமைக்கப்பட்டு அங்குள்ள மக்களுக்கு தேவையான உணவுகளை வழங்குவார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போர்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் இருக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு திருச்சி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி 1077 எண்ணிலும் அதேபோல் தொலைபேசி எண் 0431 2418995 மற்றும் +919952381108 என்று கைபேசி எண்ணிலும [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்கலாம். இதுவரை பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற 195 புகார்களுக்கு உரிய தீர்வு வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி கள்ளிக்குடி கிராமத்தில் உள்ள காய்கறி மார்க்கெட் வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் இதுவரை 78 ஆண்கள், 34 பெண்கள் உட்பட 112பயணிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இதில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேர்களும் சுகாதார துறை அலுவலர்களால் வீட்டு கண்காணிப்பில் உள்ளார்கள்.
அதேபோல் 22 ஆம் தேதி துபாயில் இருந்து 86 பயணிகளுடன் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பயணிக்கு அதிமாக காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததால் வந்த அன்றே அவரை தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை மூலம் கண்காணிப்பில் உள்ளார். இவருக்கு கொரோனா தொற்று நோய் இருக்கிறது என்று மருத்துவ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்.
Recommended Video
திருச்சி மாவட்டத்தில் நானும் மற்றும் அமைச்சர் வளர்மதி அனைத்து தொகுதிகளிலும் சுற்றி வந்தோம். குறிப்பாக காந்தி மார்க்கெட், எடத்தெரு, தில்லை நகர், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஶ்ரீரங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றி பார்த்தோம் மக்கள் சாலைகளில் நடமாட்டம் இல்லாத இடமாக காண முடிந்தது இவ்வாறு அவர் கூறினார்.