பணத்தாசை.. புஷ்பா செய்த காரியம்.. கிடுக்கிப்பிடி விசாரணையில் மாட்டி கொண்ட திருச்சி தம்பதி!
திருச்சியில் 4 லட்சம் ரூபாய் பணமோசடி செய்த தம்பதி கைது செய்யப்பட்டனர்
திருச்சி: பைக்கில் வந்த நபரை வழிமறித்து, அவரது முகத்தில் மூக்கு பொடியை தூவி, 4 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை தந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் சிறுகுடியை சேர்ந்த தம்பதி பாலசுப்பிரமணியன் - புஷ்பம். பாலசுப்பிரமணியனுக்கு வயது 31. புஷ்பத்துக்கு வயது 32 ஆகிறது.
திருச்சி, துவரங்குறிச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் பாலசுப்பிரமணியம், அந்த நிறுவனத்தில் கடன் பெற்றவர்களிடம் இருந்து கடன் தொகையை வசூல் செய்து வருவதுதான் இவரது முக்கிய வேலையே.
மூக்குப்பொடி
இப்படித்தான், சிவகங்கை மாவட்டம் முழுவதும் அலைந்து திரிந்து ரூ.2 லட்சத்தை வசூல் செய்து பைக்கில் வந்து கொண்டிருந்தார். கோணம்பட்டி என்ற இடம் அருகே வரும்போது, 3 மர்ம ஆசாமிகள் பாலசுப்பிரமணியத்தை வழிமறித்து, அவரது முகத்திலும் மூக்குப் பொடியை தூவி திணறடித்தனர். பின்னர் பையில் வைத்திருந்த 2 லட்சத்தையும் பறித்து கொண்டு ஓடிவிட்டனர்.
விசாரணை
பாலசுப்பிரமணியம் உடனடியாக மேனேஜருக்கு தகவல் சொன்னார். மேனேஜரும் போலீசுக்கு சொல்ல.. துவரங்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணையும் ஆரம்பமானது. ஆனால் சம்பந்தப்பட்ட பாலசுப்பிரமணியனோ உளறி உளறி பேசவும், விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தது போலீஸ்!
வசூல் தொகை
அப்போதுதான் விஷயம் வெளியே வந்தது.. சம்பவம் நடந்த கோணம்பட்டிக்கு மனைவி புஷ்பத்தை பாலசுப்பிரமணியன்தான் வரவழைத்துள்ளார். கணவர் முகத்தில் மூக்குப்பொடியை தூவியதே புஷ்பம்தான்.. அதுமட்டுமில்லை.. வசூல் தொகை மொத்தம் 4 லட்சத்து 53 ஆயிரம். ஆனால் 2 லட்சம்தான் வசூல் ஆனது என்று பொய் சொன்னதும் தெரியவந்தது.
கைது
இதையடுத்து போலீசார் பாலசுப்பிரமணியின் வீட்டில் சோதனை நடத்தி, வசூல் தொகை மொத்தத்தையும் கைப்பற்றி பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். ஆனால் புஷ்பம் எஸ்கேப் ஆகி உள்ளதால் அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.