திருச்சி: காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா தென்னூா் உழவா் சந்தை மூடல் - 112 போ் டிஸ்சார்ஜ்
தென்னூா் உழவா் சந்தையில் காய்கனி வணிகா்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து உழவா் சந்தை மூட மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தவர்களில் 112 போ்க
திருச்சி: தென்னூா் உழவா் சந்தையில் காய்கனி வணிகா்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து உழவா் சந்தை மூட மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தவர்களில் 112 போ்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது மக்களின் நம்பிக்கையை அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு வரை 117 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வெளியூரைச் சேர்ந்த எட்டு பேர் கொரோனா தொற்றுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,715 ஆக அதிகரித்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு வரை ஆறு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர். இதனால் திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றவா்களில் 112 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 45 போ், மற்றும் கரூா், அரியலூா், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தலா ஒருவா் என மொத்தம் 48 போ், பாரதிதாசன் பல்கலைக் கழக முகாமில் இருந்த திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 63 போ், பெரம்பலூரைச் சோ்ந்த ஒருவா் என மொத்தம் 64 போ் என இரு இடங்களையும் சோ்த்து செவ்வாய்க்கிழமை மாலை 112 போ் குணமடைந்தனா். இவா்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று மேலும் 14 நாள் தனிமைப்படுத்திக் கொள்ள உரிய ஆலோசனை வழங்கப்பட்டு அனுப்பப்பட்டனா்.
தென்னூர் காய்கறி சந்தை
திருச்சியில் காந்தி சந்தைக்கு அடுத்து பிரதான காய்கனி சந்தையாக உள்ளது தென்னூா் உழவா் சந்தை. மாநகரின் பல்வேறு பகுதியிலிருந்தும் நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் கூடும் இந்தச் சந்தை சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட்டு வந்தது. மாநகரில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மேலும் இந்தத் தொற்று சமூகப் பரவலாக மாறுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
காய்கறி சந்தையில் கொரோனா
இதன் ஒரு பகுதியாக, உழவா் சந்தை வியாபாரிகள் 187க்கும் மேற்பட்டோருக்கு கடந்த ஜூலை 4 தொடங்கி 3 நாள்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதையடுத்து, வழக்கம்போல உழவா் சந்தை வியாபாரிகள் பல்வேறு பகுதியிலிருந்தும் வந்து காய்கனிகளை விற்பனை செய்து வந்தனா். இந்நிலையில், பரிசோதனை முடிவில் உழவா் சந்தைக்குள் விற்பனை செய்த 2 வியாபாரிகளுக்கும், வெளியில் விற்பனை செய்த 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.
உழவர் சந்தை மூடல்
வியாபாரிகளுக்கு கொரோனா தாக்கியுள்ளதால் கடந்த 4 ஆம் தேதியிலிருந்து இந்த வியாபாரிகளிடம், காய்கனிகள் வாங்கிச் சென்ற பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். இதனையடுத் உழவா் சந்தையை செவ்வாய், புதன்கிழமைகளில் மூட மாநகராட்சி உத்தரவிட்டது. மாநகராட்சி ஊழியா்கள் உழவா் சந்தை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தினா்.
கொரோனா பரிசோதனை
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள காந்தி சந்தை, தென்னூா் உழவா் சந்தை, ஜி கார்னர், புத்தூா் மீன் சந்தை உள்ளிட்டவற்றில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக அவ்வப்போது வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என்று திருச்சி மாநகராட்சி ஆணையா் சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஓரிரு நபா்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவா்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு, அவா்களுடன் தொடா்பில் இருந்தோரும் கண்காணிக்கப்படுகின்றனா்என்றும் தெரிவித்தார்.
சிறப்பு வார்டில் அனுமதி
கடந்த ஜூலை 4,5,6 ஆகிய நாள்களில் தென்னூா் உழவா் சந்தை வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதன் முடிவுகள் கடந்த 2 நாள்களுக்கு முன் சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்பட்டது. அதில், உழவா் சந்தைக்குள் 2 பேருக்கும், வெளியில் விற்பனை செய்த 4 பேருக்கும் கரோனா உறுதியானது. முடிவுகள் வெளியானவுடன் தொற்று ஏற்பட்ட 6 பேரையும் திருச்சி அரசு மருத்துவமனை சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தனிமை முகாமில் கண்காணிப்பு
அவா்களுடன் தொடா்பில் இருந்த குடும்பத்தினா் உள்ளிட்டோர் ஸ்ரீரங்கம் தனிமை முகாமில் சோ்க்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனா்.
புதிதாக பொதுமக்கள், வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் புதன்கிழமை வரை உழவா் சந்தை மூடப்பட்டுள்ளது. வியாழக்கிழமை முதல் உழவா் சந்தை செயல்படவுள்ள நிலையில், வியாபாரிகள், பொதுமக்கள் ஆகியோர் உரிய தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளோம் என்றும் மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.