உயிர் மீதான பயம் கொரோனா அச்சத்தால் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள் - வெறிச்சோடிய திருச்சி
திருச்சியில் கொரோனா பயத்தால் மக்கள் வெளியே வருவதை தவிர்த்ததால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி திருச்சி நகரம் அறிவிக்கப்படாத முழுஊரடங்கு போல் காட்சி அளித்தது
திருச்சி: கொரோனா தாக்கினால் உயிர் போய்விடுமோ என்ற பயம் பரவி வருவதால் திருச்சியில் மக்கள் வெளியே நடமாடுவதை தவிர்த்து வீடுகளுக்குள் முடங்கி விடுகின்றனர். முழு ஊரடங்கு அமல்படுத்தாமலேயே திருச்சியில் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
கொரோனா வைரஸ் என்னும் கொடிய அரக்கனை ஒழிக்க முடியாமல் உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் தவித்துக் கொண்டிருக்கின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை இந்தியாவில் 5 லட்சத்தை தாண்டி விட்டது. சுமார் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வருவது என்பது ஒரு சவாலான பணி தான். மத்திய, மாநில அரசுகள் என்ன தான் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் அதையும் தாண்டி கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வருவதால் இந்நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கடந்த மார்ச் 25ஆம் தேதி, முதல் முதலாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது 15 அல்லது 20 நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்று தான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், 3 மாதங்கள் முழுமையாக முடிவடைந்து விட்டது. வெற்றிகரமான 100வது நாள் போஸ்டர் கூட ஒட்டி வருகின்றனர். நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அப்படி நீட்டிக்கப்பட்டால் என்ன செய்வது என்று மக்கள் ஒரு புறம் தவித்து வருகிறார்கள்.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத வகையில் சென்று கொண்டே இருப்பதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சென்னையை தொடர்ந்து கொரோனா வேகமாக பரவி வரும் மதுரை, தேனி மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி நகரில் இதுவரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. ஆனால், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500ஐ தாண்டிவிட்டதால் எந்த நேரத்திலும் திருச்சி மாவட்டத்திலும் முழு ஊரடங்கிற்கான அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் திருச்சி நகரில் உள்ள என்.எஸ்.பி. சாலை, பெரிய கடைவீதி, காந்தி மார்க்கெட் வெங்காய மண்டி, வெல்ல மண்டி சாலைகள், மேலப்புலிவார்டு சாலை, சிங்காரத் தோப்பு, சத்திரம் பஸ் நிலையம் ஆகிய பகுதிகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. வழக்கமாக இந்த பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஞாயிறுகிழமையான நேற்று மக்கள் அதிக அளவில் இல்லை. இதனால் வாகன நெருக்கடியும் இல்லை.
வாகன ஓட்டிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கும் உத்தர பிரதேச காவல் துறை... என்னனு தெரியுமா?
ஊரடங்கு தளர்விற்கு முன் காந்தி மார்க்கெட் பகுதியில் தேவையில்லாமல் சுற்றித் திரிந்தவர்களை போலீசார் விரட்டி அடித்த கால கட்டம் ஒன்று இருந்தது. ஆனால், தற்போது தளர்வு வழங்கப்பட்ட பின்னரும் இந்த பகுதியில் கூட்டம் இல்லாமல் போனதற்கு ஒரே காரணம். உயிர் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள பயம் தான். அதனால் தான் முழு ஊரடங்கு அறிவிக்கப்படாமலேயே திருச்சி நகரம் இப்படி காணப்படுகிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.