நடிகர் விஜய் மீது பழிவாங்கும் நடவடிக்கை... விஜய்க்கு ஆதரவாக நல்லகண்ணு குரல்
திருச்சி: நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது, அவர் மீதான பழிவாங்கும் நடவடிக்கை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். மேலும், நடிகர் விஜய் படப்பிடிப்பில் இருப்பது தெரிந்தும், அதை நிறுத்திவிட்டு சோதனை நடத்த வேண்டியதற்கான அவசியம் என்ன என அவர் வினவியுள்ளார். மத்திய அரசுக்கு எதிராக யார் கருத்து கூறினாலும் அவர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக நல்லகண்ணு வேதனை தெரிவித்தார். நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையை பழிவாங்கும் நடவடிக்கையாகவே தாம் கருதுவதாக நல்லகண்ணு கூறினார்.
பெரியார் தொடர்பாகவும், குடியுரிமைச் சட்டம் தொடர்பாகவும் மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி பேசியதால், அவர் மீதான வருமான வரித்துறை வழக்குகள் ரத்து செய்யப்பட்டதாகவும், இது மத்திய அரசு பாரபட்சமாக நடந்துகொள்வதை காட்டுவதாகவும் விமர்சித்தார். இது போன்ற போக்கை மத்திய அரசு கடைபிடிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார். இதனிடையே இலங்கையில் உள்ள தமிழர்கள் முற்றிலும் அந்நாட்டு அரசால் புறக்கணிக்கப்படுவதாகவும், அங்குள்ள தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் த.பாண்டியன் மற்றும் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் நேற்று கருத்துக்கூறியிருந்த நிலையில், நல்லகண்ணுவும் ரஜினியை விமர்சிக்கும் வகையில் அவரது கருத்தை கூறியுள்ளார். இதனிடையே விஜய்க்கு ஆதரவாக ஏற்கனவே தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், இப்போது நல்லகண்ணுவும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். மேலும், விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை நிறுத்தியது தேவையற்ற ஒன்று என தெரிவித்துள்ளார்.