உனக்கு என்னய்யா நாங்க தருவோம்.. இந்தாய்யா.. வாங்கிக்க.. கண்ணீரை வர வைக்கும் டெல்டா மக்கள்
உதவி புரிய வருபவர்களுக்கு டெல்டா மக்கள் இளநீர் தருகிறார்கள்.
திருச்சி: "எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கற எங்களால இதைதான் உங்களுக்கு தர முடிஞ்சுது" என்று நெகிந்து சொல்கிறார்கள் டெல்டா விவசாயிகள். அப்படி என்ன தந்தார்கள்? யாருக்கு தந்தார்கள்?
கஜாவின் சீற்றத்தால் டெல்டா விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து நின்று கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக நாகை, தஞ்சை, திருவாரூர், புதுகை, அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கஜாவின் தாக்கம் அதிகமாக இருந்தது.
அதனால்தான் புயல் அடிச்சு ஓய்ந்து போய் 4 நாள் ஆகியும் இன்னும் பழைய மாதிரி தங்களால் இயல்பான வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்க முடியவில்லை. சாப்பாடு, தண்ணி, மருத்துவ வசதி, கரண்ட் இப்படி எதுவுமே இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
[பால் விலை லிட்டர் 100 ரூபாய்.. தண்ணீர் குடம் 10 ரூபாய்.. பட்டுக்கோட்டையில் அக்கிரமம்! ]
நேரில் சென்று ஆறுதல்
அவர்களுக்கு தனியார் அமைப்புகள் முதல் தனிப்பட்ட நபர்கள் வரை உதவிக் கரம் நீட்டப்பட்டு வருகிறது. யாரும் யாருக்குமே சொல்லாமல், கட்டளையிடாமல், தாங்களாகவே ஆளாளுக்கு இறங்கி உதவி செய்து செய்துகிறார்கள். பிஸ்கட் பாக்கெட், தண்ணி, மெழுகுவர்த்தி, மருந்து மாத்திரைகள், கொசுவர்த்தி சுருள்கள் இப்படி என்னவெல்லாம் முடியுமோ அதையெல்லாத்தையும் கொண்டு போய் கொடுத்துவிட்டு டெல்டா மக்களை பார்த்து பேசி ஆறுதல் சொல்லிவிட்டு வருகிறார்கள்.
லாரி டிரைவர்கள்
இதுபோக, இளைஞர்களும், மாணவர்களும் தங்கள் ஏரியாக்களில் உள்ள பகுதி மக்களிடம் அத்தியாவசிய பொருட்களை வாங்கி லாரி, டெம்போக்களில் ஏற்றி பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கும் அனுப்பி வைத்து வருகிறார்கள். அவ்வளவு தூரத்தில் இருந்து பொருட்களை தூக்கிகொண்டு வரும் ஆட்களும், நிவாரண பொருட்களுடன் ஊருக்குள் நுழையும் லாரி டிரைவர்களுக்கும் டெல்டா மக்கள் இளநீர் கொடுத்து குடிக்க வைத்து அனுப்புகிறார்களாம்.
இளநீர் தருகிறார்கள்
ஊருக்குள் எங்கே பார்த்தாலும் தென்னையும், வாழையும் முறிந்து விழுந்து கிடக்கின்றன. அதனால் சிதறி கிடக்கும் இளநீரை வெட்டி சாப்பிட உதவி செய்ய வருபவர்களுக்கு தருகிறார்களாம். அங்கேயே கண் முன்னாலேயே சாப்பிடவும் வைக்கிறார்களாம். இதுபோக குலை குலையாக உள்ள இளநீர், வாழைகளை அவர்களிடம் கொடுத்து வீட்டுக்கு கொண்டு போகும்படி சொல்கிறார்களாம்.
இளகும் மக்கள்
உதவி செய்ய வரும் வண்டிகளை, காலியாக திருப்பி அனுப்பாமல் அதில் இளநீர், வாழைகளை போட்டு அனுப்பி வைக்கிறார்களாம். கொடுத்து கொடுத்து உதவியவர்கள் டெல்டா மக்கள்... கொடுத்தே பழக்கப்பட்ட இந்த மக்கள் இன்று நிர்க்கதியாக நின்றபோதும் கொடுக்கும் குணம் மாறவில்லை என்பதை மீண்டும் நிரூபித்து கொண்டுள்ளார்கள். தன்னையே இழந்தாலும் உதவுவது இளநீர் மட்டுமல்ல.. டெல்டா மக்களும்தான்!!