குலுங்கப் போகுது டெல்லி.. 10 லட்சம் விவசாயிகள் திரள்கிறார்கள்.. மாபெரும் போராட்டத்திற்குத் திட்டம்!
திருச்சி : விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி டெல்லியில் 10 லட்சம் விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்த உள்ளதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது: நாடு முழுவதும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த நவம்பர் மாதம் 29, 30-ந் தேதிகளில் டெல்லியில் ஏராளமான விவசாயிகள் திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம்.
இந்தநிலையில் பிரதமர் மோடி அளித்துள்ள பேட்டியில், விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி என்பது பிரச்சினைக்கு முழுமையான தீர்வு அல்ல. விவசாயத்தையும், விவசாயிகளையும் வலிமையாக்குவோம் என்றும், தேர்தலுக்காக காங்கிரஸ் விவசாய கடன் பற்றி பேசுகிறது என்றும் கூறி இருக்கிறார்.
பிரதமரின் இந்த கருத்து விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து டெல்லியில் 29 மாநில விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கும் அவசர ஆலோசனை கூட்டம் டெல்லியில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
இந்த கூட்டத்தில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி நாடு முழுவதும் இருந்து 10 லட்சம் விவசாயிகள் டெல்லியில் ஒன்று திரண்டு மாபெரும் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்க உள்ளோம். அந்த போராட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 300 விவசாயிகள் தூக்குக் கயிறுடன் சென்று பிரதமரின் வீட்டின் முன்பு தற்கொலை செய்யும் போராட்டத்தை நடத்த உள்ளோம் என்று கூறினார்.