"டாக்டர்" எடப்பாடி பழனிச்சாமி எனும் நான்.. அடுத்து காவிரிக் கரையில் புதுப் பட்டம் தரப் போறாங்களாம்!
திருச்சி: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அண்மையில் எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக விவசாயிகளும் புதிய பட்டம் வழங்கவுள்ளனர்.
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றியதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய பட்டத்தை விவாசய சங்கத்தினர் சூடவுள்ளனர்.
வரும் மார்ச் 7-ம் தேதியன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவாரூரில் நடைபெறும் பாராட்டு விழாவில் புதிய பட்டத்தை வழங்கி கவுரவிப்போம் என கூறுகிறார் மன்னை ரெங்கநாதன்.
சாட்டையை சுழட்டுவாரா எடப்பாடியார்.. சுதாரிக்க வேண்டும் அதிமுக அரசு.. சுளுக்கெடுக்க தயங்க கூடாது!
கவுரவிப்பு
எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதவி தேடி வந்தது போல் பட்டங்களும் தேடி வரத்தொடங்கியுள்ளன. புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் நடத்தும் எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கு டெல்டா விவசாயிகள் சார்பில் புதிய பட்டம் சூட்டி கவுரவிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுகவில் உள்ள இ.பி.எஸ். ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.
ஜெ.வுக்கு பாராட்டு
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வைத்ததற்காக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் 2013ம் ஆண்டு மார்ச் 9-ந்தேதி தஞ்சையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது ஜெயலலிதாவுக்கு ''பொன்னியின் செல்வி'' என்ற பட்டத்தை சூட்டி விவசாயிகள் சங்கத்தினர் சிறப்பித்தனர். இப்போதும் அதே பாணியில், ஜெயலலிதாவை கவுரவித்ததை போலவே எடப்பாடி பழனிசாமியையும் கவுரவிக்க உள்ளனர் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தினர்.
தகவல்
இது தொடர்பாக திருச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய காவிரி டெல்டா விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் மன்னை ரெங்கநாதன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு சிறந்த செயல்வீரராக இருக்கிறார் என புகழாரம் சூடினார். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வரும் மார்ச் 7-ம் தேதி திருவாரூரில் பாராட்டு விழா நடத்த உள்ளதாக கூறினார். அப்போது அவருக்கு சிறப்பு பட்டம் கொடுப்பது பற்றி விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
ரகசியம்
வேளாண் மண்டலம் தொடர்பாக அறிவிப்பை இரண்டு மாதங்களுக்கு முன்பே முதல்வர் எடுத்துவிட்டதாகவும், அதனை ரகசியமாக வைத்து நிறைவேற்றியிருக்கிறார் எனவும் மன்னார்குடி ரெங்கநாதன் தெரிவித்தார்.காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் கொண்டு வந்ததை அரசியல் ஆக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். மேலும் இந்த மண்டலத்தில் கரூர், மாயனூர், அரியலூரின் ஒரு பகுதி, கடலூர், மாவட்டத்தின் சில பகுதிகளும் விரைவில் இணையும் என தெரிவதாக கூறினார்.