என்ன ஒரு அக்கிரமம்.. ஓடும்ரயிலில், மாற்று திறனாளியை அடித்து உதைத்த திமுக பிரமுகர்.. 6 பேர் மீது கேஸ்
மாற்று திறனாளியை திமுக பிரமுகர் தாக்கி உள்ளார்
திருச்சி: மாற்றுதிறனாளியை ஓடும் ரயிலிலேயே திமுக பிரமுகர் ஒருவர் அடித்து தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இது சம்பந்தமாக திமுக பிரமுகர் உட்பட 6 பேர் மீது திருச்சி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை எம்ஜிஆர் நகர் தொல்காப்பியர் தெருவை சோ்ந்தவர் பொன்னுச்சாமி.. 40 வயதாகிறது. இவர் ஒரு மாற்று திறனாளி.. சினிமாவில் உதவி இயக்குநராக சென்னையிலேயே தங்கி வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் மதுரையில் இருந்து சென்னைக்கு, செல்ல பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்தார்.. அது ரிசர்வேஷன் செய்யப்பட்ட கம்பார்ட்மென்ட்..
அப்போது, அதே பெட்டியில் காளிதாஸ் 36, என்பவர் நண்பர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.. இவர்கள் திருச்சி திமுக பிரமுகர் ஒருவரின் பிறந்த நாளுக்காக சென்று கொண்டிருந்தனர்.. காளிதாஸ் தன்னுடைய நண்பர்கள், மகேந்திரன் 36, காா்த்தி 29, மூர்த்தி 54, குணசேகரன் 61, கவுன்சிலர் ஒருவர் ஆகியோருடன் ஒன்று சேர்ந்து தண்ணி அடித்துவிட்டு கெட்ட கெட்ட வாா்த்தைகளில் பேசிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
அதே ரயில் பெட்டியில் உட்கார்ந்திருந்த சக பயணிகள் இதை கேட்டு அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளனர்.. இதை பார்த்த பொன்னுச்சாமி, இப்படியெல்லாம் தகாத முறையில் பேச வேண்டாம் என்று சொன்னாராம்.. அதை கேட்டு, ஆத்திரமடைந்த அந்த கும்பல் பொன்னுசாமியிடம் வாக்குவாதம் செய்து அவரை சரிமாரியாக தாக்கி இருக்கிறது.
பிரச்சனையும் பெரிதாகி உள்ளது.. அதற்குள் திருச்சி ரயில்வே ஸ்டேஷனும் வந்துவிட்டது.. ரயில் நிலையத்தில் இருந்த உதவி காவல் ஆய்வாளர் லெட்சுமி, இரு தரப்பினரையும் நடந்தவை குறித்து விசாரித்தார்.. பிறகு, திருச்சி ரயில்வே இருப்புப்பாதை கண்காணிப்பாளா் செந்தில்குமார் இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி பொன்னுசாமியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.. இதையடுத்து திருச்சி ரயில்வே போலீஸார் திமுக பிரமுகா் உள்பட 6 போ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.. விசாரணையும் நடந்து வருகிறது.