தேமுதிக கூட்டணி யாருடன்... இன்னும் முடிவு செய்யவில்லை என்கிறார் விஜயபிரபாகரன்
கூட்டணி குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. மக்கள் நலன் விரும்பும் கட்சியுடன்தான் தேமுதிக கூட்டணி இருக்கும் என்று விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.
திருச்சி: திமுக உடன் தேமுதிக கூட்டணி சேருவது குறித்து காலம்தான் பதில் சொல்லும் என்று விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கூறியுள்ளார். தேமுதிகவின் தேவை திமுகவிற்கு இருக்கலாம் என்று கூறியுள்ள அவர், கூட்டணி குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. மக்கள் நலன் விரும்பும் கட்சியுடன்தான் தேமுதிக கூட்டணி சேரும் என்று தெரிவித்துள்ளார்.
Recommended Video
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் பரபரப்பாகவே உள்ளது. ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன. கூட்டணியில் உள்ள உதிரி கட்சிகள்தான் செய்யவதறியாது திகைத்து வருகின்றன.
எந்தக்கூட்டணியில் இருக்கிறோம் என்று சில கட்சிகளால் முடிவு செய்ய முடியவில்லை அந்த அளவிற்கு ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் கண்ணாமூச்சி ஆடி வருகின்றன. தொகுதி பங்கீடு பற்றி இன்னமும் பேசவேயில்லை. தேமுதிகவின் நிலை படு பரிதாபமாக இருக்கிறது. பிரேமலதாவும் விஜயபிரபாகரனும் ஆளுக்கு ஒரு பேச்சு பேசிக்கொண்டிருக்கின்றனர்.
தேமுதிக எந்த கூட்டணி
சசிகலாவின் வரவைப் பொறுத்தே அரசியல் களத்தில் சில மாற்றங்களை உருவாக்கலாம். தேமுதிகவின் பிரேமலதாவும் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது அதிமுகவின் இரட்டைத் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிமுக-பாஜக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது கேள்விக்குறியாகியிருக்கிறது.
சசிகலாவிற்கு ஆதரவு
ஒருபக்கம் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டே மறுபக்கம் அதிமுக கூட்டணியில் இருப்பதாக கூறுகிறார் பிரேமலதா.
அதே நேரத்தில் அதிமுகவிற்கு மாற்று தேமுதிக தான் என்றும் கூறியுள்ளார். அதேபோல தனித்துப் போட்டியிடவும் தயார் என்று பேசி வருகிறார்.
மக்கள் நலன் விரும்பும் கூட்டணி
பிரேமலதாவைப் போலவே விஜயபிரபாகரனும் சில நேரங்களில் குழப்பமாக பேசுகிறார். திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. மக்கள் நலன் விரும்பும் கட்சியுடன் தேமுதிக கூட்டணி சேரும் என்று தெரிவித்துள்ளார்.
காலம் பதில் சொல்லும்
திமுக உடன் கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும். தேமுதிகவின் தேவை திமுகவிற்கு இருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார். அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்காத ஏமாற்றத்தால் விஜயபிரபாகரன் இப்படி பேசுவதாகக் அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.
எந்த கூட்டணியில் தேமுதிக
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் சில தினங்களுக்கு முன்பு கேப்டன் அபிமானி ஒருவர் பிரேமலதாவுக்கு கடிதம் எழுதுவது போல ஒரு கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரையில், கூட்டணி சீட்டுக்காக எச்சில் இலைக்கு நாக்கைத் தொங்கப் போட்டுக் காத்துக் கொண்டிருக்கும் பிராணி போல தேமுதிக செயல்படுவதாகப் பயங்கரமாக விமர்சனம் செய்திருந்தது. கடந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிக உடன் இருந்த கட்சிகள் இப்போது திமுக கூட்டணயில் உள்ளன. இப்போது எந்த கூட்டணியில் சேருவது என்று தெரியாமல் திரிசங்கு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தேமுதிக.