சார் நீங்க சொல்லுங்களேன்.. உள்ளாட்சி தேர்தல் நடக்குமா.. ஆட்சியரிடம் கேட்ட திமுக பிரமுகர்
திருச்சி: திருச்சியில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா என ஆட்சியரை பார்த்து திமுக பிரமுகர் கிண்டலாக கேட்டார்.
உள்ளாட்சி தேர்தல் இந்த மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதிலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.
இதை எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் யாராவது வழக்கு தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே இது போன்று தமிழக அரசு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுகிறது.
கூட்டத்தில்
உள்ளாட்சி தேர்தல் நடைமுறைகள் குறித்து அனைத்து கட்சிக் கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.
நடவடிக்கை
தேர்தல் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடைபெறும். விதிமீறல்கள் ஏதேனும் இருந்தால் தகவல் அளிக்கலாம். நடவடிக்கை எடுக்கப்படும் என இந்த கூட்டத்தில் ஆட்சியர் அறிவித்தார்.
அநீதி
அப்போது மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என திமுக பிரமுகர் பாஸ்கரன் கோரிக்கை விடுத்தார். அப்போது மற்ற கட்சியினரும் ஆளுங்கட்சிக்கு எதிராக கோரிக்கையை முன் வைத்தார். இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவது அநீதி என எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
தேர்தல் ஆணையம்
இந்த விவகாரம் அரசின் கொள்கை முடிவு. இதற்கு நான் எந்த பதிலையோ உறுதிமொழியையோ கொடுக்க முடியாது. எனினும் நீங்கள் சொன்னதை தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்கிறேன் என ஆட்சியர் தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தல்
அப்போது திமுக ஒன்றிய செயலாளர் கருப்பையா, திடீரென ஆட்சியரை பார்த்து சார் நீங்கள் சொல்லுங்கள், உண்மையில் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா என சிரித்தபடியே கேட்டார். இதனால் கூட்டத்தில் கலகலப்பு ஏற்பட்டது.