ஆஹா.. நேரமே சரியில்லை போலயே.. திருச்சி குமார் எம்பி கன்னத்தில் விழுந்த பளார்.. ஒரே அடிதடி!
திருச்சியில் பயணிகள் நிழற்குடை அமைப்பதில் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
Recommended Video
திருச்சி: திருச்சியில் பயணிகள் நிழற்குடை அமைப்பதில் தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தி.மு.க. பகுதி செயலாளர் தர்மராஜன் மற்றும் பிரபா ஆகியோர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
திருச்சி பொன்மலைப்பட்டியில் ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான மதில் சுவர் உள்ளது. அதன் எதிரே தி.மு.க.வின் பொன்மலை பகுதி கிளை அலுவலகம் உள்ளது. தி.மு.க.வினர் ரெயில்வே மதில் சுவரில் கட்சி விளம்பர சுவரொட்டி ஒட்டியிருந்தனர். மற்றும் சுவர் அருகில் கொடிக்கம்பமும் நட்டு இருந்தனர்.
இந்த நிலையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.பி. குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு முடிவெடுத்தார். அதற்காக தி.மு.க. வினர் பயன்படுத்திய மதில் சுவரை பொக்லைன் எந்திரம் கொண்டு நேற்று பிற்பகல் குமார் எம்.பி. மேற்பார்வையில் அ.தி.மு.க.வினர் இடித்து தள்ளினர்.
தாக்குதல் நடந்தது
அப்போது தி.மு.க. பகுதி செயலாளரான தர்மராஜின் அண்ணன் பெரியசாமி, ஏன் அதை இடிக்கிறீர்கள் என தட்டி கேட்டுள்ளார். அவரிடம் குமார் எம்.பி., அதை கேட்க நீ யார்? எனக்கூறி பெரியசாமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினை காட்டுத்தீ போல பரவ அங்கு ஏராளமான தி.மு.க.வினரும் திரண்டனர்.
எம்பி மீது தாக்குதல்
பெரியசாமி தாக்கப்பட்டதை அறிந்த அவரது மகன் கோபி மிகவும் ஆவேசம் அடைந்தார். சற்றும் எதிர்பாராத வேளையில் குமார் எம்.பி.யின் அருகில் சென்ற கோபி, அவரது கன்னத்தில் ‘பளார்' என அறைந்தார். எம்.பி.யை தாக்கிவிட்டதை அறிந்த அ.தி.மு.க.வினர் மற்றும் குமார் எம்.பி.யின் ஆதரவாளர்கள் அங்கு உருட்டு கட்டைகளுடன் திரண்டு வந்து தி.மு.க.வினரை சரமாரியாக தாக்கினர்.
கலவரம்
பதிலுக்கு தி.மு.க.வினரும் தாக்கினர். இதனால் இரு தரப்பினருக்குமிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கல்வீசி தாக்கிக்கொண்டனர். அங்கும், இங்கும் அ.தி. மு.க.வினர்-தி.மு.க.வினர் ஓடி ஓடி தாக்கியதில் அப்பகுதியே போர்க்களம்போல காட்சியளித்தது. அங்கு பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.
பெரிய கலவரம்
அப்போது போலீசாரின் முன்னிலையிலேயே பொன்மலை பகுதி தி.மு.க. அலுவலகத்தை அ.தி.மு. க.வினர் சூறையாடினார்கள். ஆனால் அதை போலீசார் தடுக்கவில்லை என தெரிகிறது. இதற்கிடையே மோதல் தொடர்பாக தி.மு.க. பொன்மலை பகுதி செயலாளர் தர்மராஜ் மற்றும் கோபி, பிரபாகரன் உள்ளிட்ட தி.மு.க.வினரை பொன்மலை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
மருத்துவமனையில்
குமார் எம்.பி. தாக்கியதால் காயம் அடைந்த பெரியசாமி திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கான அஸ்திவாரம் தோண்டப்பட்டது. மோதல் தொடர்பாக பொன்மலை போலீசில் தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் தனித்தனியாக புகார் கொடுத்தனர். புகார்களை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ்
அந்தப் பகுதிக்கு உருட்டுக்கட்டைகளுடன் வந்த அ.தி.மு.கவினர், தி.மு.க பகுதி செயலாளர் தர்மராஜன் அலுவலத்தை அடித்து உடைத்தனர். இதனால் அங்கு பதற்றம் அதிகமானது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு திருச்சி மாநகர் காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் துணை ஆணையர் மயில்வாகனன் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்தனர்.
கைது செய்தனர்
விசாரணைக்குப் பின்னர் தர்மராஜன் மற்றும் பிரபா ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர். கடந்த பத்து வருடங்களாக எம்.பியாக இருக்கும் குமார் அப்பகுதியின் வளர்ச்சிக்கு எதுவும் செய்யாமல் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பேருந்து நிலையம் அமைப்பதாக தி.மு.கவினர் குற்றம்சாட்டினார்.
என்ன காரணம்
மேலும், திருவெறும்பூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ அன்பில் மகேஷ் அப்பகுதியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் பேருந்து நிலையம் அமைக்க இருந்ததாகவும் அதனை தெரிந்து கொண்ட அ.தி.மு.கவினர் குமார் மூலம் பேருந்து நிலையம் அமைக்க ஏற்பாடு செய்ததுதான் பிரச்சினைக்கு காரணம் என்கிறார்கள். அ.தி.மு.க எம்.பி மீது திருச்சியில் நடத்தப்பட்ட தாக்குதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.