ஒரு பக்கம் அர்ச்சகர்கள்.. இன்னொரு பக்கம் இஸ்லாமியர்கள்.. தேடி தேடி உதவிய திமுகவின் அன்பில் மகேஷ்!
திருச்சி மலைக்கோட்டை கோயில் அர்ச்சகர்களுக்கும் அரிசி, மளிகைப் பொருள்களை அன்பில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
திருச்சி: திருச்சி மலைக்கோட்டை கோயில் அர்ச்சகர்களுக்கும் அரிசி, மளிகைப் பொருள்களை அன்பில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
நாடெங்கும் கொரோனா பரவலைத் தடுக்க 4-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த 4-ம் கட்ட ஊரடங்கில் பெரும்பாலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பெரும்பாலான தொழிற்சாலைகள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
சிறுகுறு வணிக நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ளன. பொதுசேவையான பேருந்துகள், டாக்சிகள், ரயில்கள் இயக்கப்படவில்லை.இதனால், வேலையிழந்து வருமானமற்று, ஏழை எளிய மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் உதவி வருகின்றனர்.
கொரோனா சந்தேகம்.. டெல்லி மாநாடு சென்று வந்த 292 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.. திருச்சியில் பரபரப்பு
திமுக உதவி
அந்தவகையில், திமுக சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நாள்தோறும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகம் முழுக்க திமுக தீவிரமாக உதவிகளை செய்து வருகிறது. இதற்காக திமுக உருவாக்கி இருக்கும் ஒன்றிணைவோம் வா பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. திமுகவின் இந்த உதவியை மக்கள் பாராட்ட தொடங்கி உள்ளனர்.
திருச்சியில் பல உதவி
அந்தந்த மாவட்ட செயலாளர்கள், வட்ட நிர்வாகிகள் என பலதரப்பினரும் ஆங்காங்கே கொரோனா நிவாரண களத்தில் முழுமூச்சாக இறங்கியுள்ளனர்.அதன்படி, திருச்சி மாவட்ட திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி மற்றும் திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதியில் உதவிகளை செய்து வருகிறார்கள்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி களமிறங்கினார்
அங்கு உள்ள இஸ்லாமிய பெருமக்களுக்கு ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு கஞ்சி காய்ச்சுவதற்கு தேவையான அரிசி மூட்டைகளை வழங்கினார். அதேபோல் மலைக்கோட்டை கோயில் அர்ச்சகர்களுக்கும் அரிசி, மளிகைப் பொருள்கள் ஆகியவற்றை வழங்கினார். மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் அர்ச்சகர்களை மாவட்ட திமுக அலுவலகத்திற்கு வரவழைத்து, அரிசி, மளிகைப் பொருள்களை அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
அர்ச்சகர்களுக்கு உதவி
இந்நிகழ்ச்சியில் திமுகவின் பகுதி செயலாளர் மதிவாணன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு வைணவ ஸ்தலமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் அர்ச்சகர்களுக்கு நிவாரணம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தமிழகம் முழுக்க திமுகவினர் தீவிரமாக உதவிகளை செய்து வருகிறார்கள்.