ஸ்டாலின் எந்த தொகுதி சொல்றாரோ...அங்கு கண்ணைமூடிட்டு போட்டியிடுவேன்...சொல்றது யாருனு பாருங்க!
திருச்சி: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறும் இடத்தில் போட்டியிட தயாராக உள்ளேன் என்று திருவெறும்பூர் எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுக்கும், தனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.
தி.மு.க. நடத்திய மக்கள் கிராம சபை நிகழ்வுக்கு மக்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி சர்ச்சை
தி.மு.க. 11-வது மாநில மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனுர் அருகே நடைபெற உள்ளது. இதற்கான தொடக்க விழா பணிகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இதில் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க. திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொள்ளவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மக்கள் பெரும் வரவேற்பு
இந்நிலையில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தி.மு.க. தெற்கு மாவட்ட அலுவலகத்தில் திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், திருவெறும்பூர் எம்.எல்.ஏ.வுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்று தி.மு.க. நடத்திய மக்கள் கிராம சபை நிகழ்வுக்கு மக்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.
அ.தி.மு.க.வை நிராகரிப்போம்
தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 1,600 தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதுவரை ஒரு கோடி பேர் அ.தி.மு.க.வை நிராகரிப்போம் என்று கையெழுத்திட்டுள்ளனர். இது திமுகவிற்கு ஆதரவு அளிப்போம் என்று அவர்கள் கூறுவதையே எடுத்துக்காட்டுகிறது. ரேஷன் பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை, சுடுகாட்டிற்கு வழியில்லை, குடியிருக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை போன்ற அதிக அளவில் கோரிக்கைகள் இந்த கிராமசபை கூட்டங்களில் முன்வைக்கப்பட்டன.
வெற்றிக்கு காரணம் இதுதான்
இதேபோல் 2019-ம் ஆண்டு ஊராட்சிகளில் திமுக சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது மக்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி தான் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. மாபெரும் வெற்றி பெற காரணமாக அமைந்தது. திருச்சி தெற்கு மாவட்டத்தில் 156 இடங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் 16 இடங்களில் நேரடியாக நான் கலந்து கொண்டேன். இங்கு பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் ஆவணமாக தயாரிக்கப்பட்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்படும்.
நேருவுடன் பிரச்சினையா?
அடுத்து தி.மு.க ஆட்சி வந்த மூன்று மாத காலத்தில் இந்தத் கோரிக்கைகளில் முக்கியத்துவமும் அடிப்படையில் நிறைவேற்றப்படும். திருச்சி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட திருச்சி கிழக்கு, மணப்பாறை, திருவெறும்பூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டு விட்டது. ஸ்டாலின் கூறும் இடத்தில் நான் போட்டியிட தயாராக உள்ளேன். திமுக மாநாடு தொடக்க விழாவிற்கு என்னை அழைக்காத விஷயத்தில் எவ்வித அரசியலும் கிடையாது. பொதுவாக மாநாடு தொடங்குவதற்கு முன்பு பூஜை போடுவது முதன்மை செயலாளர் கே.என்.நேருவின் சென்டிமென்டான விஷயம்.
உள்நோக்கம் இல்லை
மாநாடு பணிகள் தொடக்க விழா நடந்த பகுதியின் மாவட்ட செயலாளர், நேருவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன் அடிப்படையில் அவர் கலந்து கொண்டார். அது கட்சி நிகழ்ச்சியில்லை என்பதால் நான் கலந்து கொள்ளவில்லை. இதில் வேறு எந்தவிதமான உள்நோக்கமும் கிடையாது. இவ்வாறு அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.