குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா உறுதி - திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்சி: குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று இரண்டு எம்எல்ஏக்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளான சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை எட்டப்போகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகிற 31ஆம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகளும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசார், தீயணைப்புத்துறையினர் என பலதரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள் தொடர்ந்து நோய் தொற்றுக்கு ஆளாகிவருகின்றனர். மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசுப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் கொரோனா தொற்றுக்கு தொடர்ந்து ஆளாகிவருகின்றனர்.
தமிழ்நாட்டில் நேற்று இரு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி அதிமுக எம்எல்ஏ மாணிக்கம் உடல்நிலை சரியில்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியாக உயர்வு... வைகைக்கு தண்ணீரை திறங்க - கேரளா கோரிக்கை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 6ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு செய்தபோது அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன் எம்எல்ஏ மாணிக்கமும் கலந்து கொண்டார். அதேபோல் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளான சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று உறுதியான திமுக எம்எல்ஏ ராமருக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.