யார் அரசியல் செய்வது...? நேருக்கு நேர் விவாதிக்க தயார்... அமைச்சர் காமராஜுக்கு கே.என்.நேரு சவால்
திருச்சி: பொதுமக்களிடம் இருந்து திமுக பெற்ற மனுக்கள் தொடர்பாக அமைச்சர் காமராஜூடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார் என அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.சவால் விடுத்துள்ளார்.
மேலும், நேரம், தேதி, உள்ளிட்டவற்றை அமைச்சர் காமராஜே கூறலாம் என்றும், அவருடன் தாமே விவாதிப்பதாகவும் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக மீதான அமைச்சர் காமராஜ் புகாருக்கு காட்டமாக பதிலடி கொடுத்தார்.
தென் இந்தியாவிற்கு பரவும் வெட்டுக்கிளி தாக்குதல் அபாயம்? கர்நாடகாவிற்கும் வார்னிங்.. பரபரப்பு
திமுக மீது விமர்சனம்
உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேற்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் திமுக செயல்படுவதாக தெரிவித்திருந்தார். மேலும், மோசடியாக மனுக்களை பெற்று மலிவான அரசியல் செய்வதாக திமுக மீது குற்றஞ்சாட்டினார். அரசு மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்க திமுக தவறான செய்திகளை பரப்பி வருவதாக விமர்சித்திருந்தார்.
விவாதிக்கத் தயார்
இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மூலம் புதிதாக பெறப்பட்ட 22,000 மனுக்களை மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் அளிப்பதற்காக சென்ற கே.என்.நேரு, அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் காமராஜ் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மக்களிடம் இருந்து வாங்கிய மனுக்களை நாங்கள் நிரூபிக்கத் தயார் என்றும் இது குறித்து விவாதிக்க அமைச்சர் தேதியையும், நேரத்தையும் அறிவிப்பாரா என சவால் விடுத்தார்.
மக்கள் மனுக்கள்
தமிழகத்தில் உணவுப்பிரச்சனை இல்லை என அமைச்சர் கூறுகிறார், அப்படியிருந்தால் உணவுப்பிரச்சனைக்காக இவ்வளவு மனுக்கள் எதற்கு வரப்போகிறது என நேரு வினவினார். ஒன்றிணைவோம் வா செயல்திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட உதவி எண்ணுக்கு எத்தனை லட்சம் அழைப்புகள் வந்தது என்பதை அரசு எளிதாக தெரிந்துகொள்ளலாம் என்றும் அப்படியிருந்தும் அமைச்சர் காமராஜ் திமுகவை விமர்சிக்கிறார் எனவும் கூறினார்.
ஸ்டாலின் முதல்வர்
மு.க.ஸ்டாலின் முதல்வராக வருவதை யாராலும் தடுக்க முடியாது என்றும், எதிர்க்கட்சிக்குரிய கடமையை திமுக செய்துவருவதாகவும் கே.என்.நேரு தெரிவித்தார். இதனிடையே திருச்சி மாவட்டத்தில் மட்டும் திமுக சார்பில் ஒன்றரை லட்சம் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி, உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கொரோனா கால நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.