எங்க பேச்சை முதல்வர் கேட்கவில்லை... அதுதான் இவ்வளவு சிரமத்திற்கும் காரணம் -கே.என்.நேரு
திருச்சி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை விவகாரத்தில் திமுகவின் கோரிக்கையை முதல்வர் உதாசீனப்படுத்திய காரணத்தால் தான் பாதிப்பு கடுமையாக உள்ளதாக அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா விவகாரத்தில் எதிர்க்கட்சியாக இருந்து கொடுக்க வேண்டிய அலர்ட்டை திமுக கொடுத்தும் முதல்வர் அதனை பொருட்படுத்தாமல் சட்டமன்றத்தை நடத்துவதில் மட்டுமே குறியாக இருந்தார் எனக் கூறியுள்ளார்.
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் தி.மு.க சார்பில் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு அரிசு மூட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைப்பெற்றது. இதில் திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட 34 வார்டுக்கு தலா 250 அரிசி மூட்டைகள் வீதம் தி.மு.க பகுதி செயலாளர்கள் மற்றும் வட்ட பிரதிநிதிகளிடம் தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு வழங்கினார்.அவர்கள் மூலம் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு அரிசி மூட்டைகள் விநியோகம் செய்யும் பணியை அவர் தொடங்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என ஆரம்பம் முதலே வலியுறுத்தினார்.சட்ட சபையில் வெளிநடப்பு செய்து கோரிக்கை வைத்தார்.ஆனால் தமிழக அரசு தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை என கூறிக்கொண்டு எந்த நடவடிக்கைகளும் எடுக்காததால் தான் தற்போது மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
வானில் தோன்றும் சூப்பர் பிங்க் மூன்... பூமியை நெருங்கி வரும் நிலா
ஊரடங்கு பிறப்பிக்கும் நிலை வரை ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வளவு பிரச்சனை ஏற்பட்டிருக்காது.தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவில்லை ஆனால் மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது.தி.மு.க விற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தி.மு.க சார்பில் டி.ஆர்.பாலு கலந்து கொள்ள உள்ளார் என கூறினார்.