கத்திரிக்காய் முத்தினால் கடைக்கு வரப்போகுது... அதிமுகவில் நடப்பது தெரியாமலா போய்விடும் -கே.என்.நேரு
திருச்சி: கத்திரிக்காய் முத்தினால் கடைக்கு வந்து தான் தீர வேண்டும் என்பது போல் அதிமுகவில் நடந்துவரும் பிரச்சனைகள் ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும் என திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
மேலும், 10 வருடம் பொறுத்த தங்களால் இன்னும் 6 மாதம் பொறுக்க முடியாதா என செய்தியாளர்களிடம் கலகலத்தார்.
திருச்சியை பொறுத்தவரை நூற்றாண்டு பழமைமிக்க காந்தி மார்க்கெட்டை இடம் மாற்றுவது சரியாக இருக்காது எனத் தெரிவித்தார்.
தமிழக அரசு மீது எனக்கு வருத்தம் உண்டு... சாபத்துக்கு ஆளாகாதீங்க... நடிகர் மயில்சாமி ஆக்ரோஷம்..!
உறுப்பினர் சேர்ப்பு
திருச்சி மத்திய மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆன்லைன் மூலம் திமுக உறுப்பினர் சேர்ப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த அவர் இளைஞர்களுக்கு திமுகவில் நல்ல எதிர்காலம் உள்ளதாக தெரிவித்தார். திருச்சி காந்தி மார்க்கெட்டை தனிப்பட்ட சிலரது ஆதாயத்துக்காக கள்ளிக்குடிக்கு மாற்றுவதை ஏற்க இயலாது என்றும் நூற்றாண்டு பழமைமிக்க மார்க்கெட் இப்போதுள்ள இடத்திலேயே தொடர்ந்து இயங்க வேண்டும் என்பது தான் தமது விருப்பம் எனவும் கூறினார்.
கத்திரிக்காய் முத்தினால்
காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கவலைப்பட தேவையில்லை என்றும் திமுக ஆட்சிக்கு வந்தால் இப்போதுள்ள இடத்திலேயே மார்க்கெட் தொடரும் என தாம் உறுதியளிப்பதாக தெரிவித்தார். அதிமுகவில் பிரச்சனைகள் இல்லை என அமைச்சர்கள் கூறி வந்தாலும் உள்ளுக்குள் உச்சகட்ட மோதல் நடப்பதை அறிய முடிவதாகவும், கத்திரிக்காய் முத்தினால் கடைக்கு வரும் என்பதை போல் 28-ம் தேதி அதிமுகவில் என்ன நடக்கப் போகிறது என்பது தெரிந்துவிடும் என கூறினார்.
இரு மொழிக்கொள்கை
தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை தான் செயல்படுத்துவோம் எனக் கூறிவிட்டு நாடாளுமன்றத்தில் அதற்கு முரணாக அதிமுக நடந்துகொள்வதாகவும், அதிமுக ஆட்சி இன்னும் 6 மாதத்தில் முடிவுக்கு வருவது உறுதி எனவும் நம்பிக்கை தெரிவித்தார். திமுக ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை தரக்கூடும் எனவும் கூறியிருக்கிறார்.
வியாபாரிகள் கோபம்
திருச்சி காந்தி மார்க்கெட் இடமாற்றம் விவகாரத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீதும் அரசு மீதும் வியாபாரிகள் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள். வியாபாரியாக இருந்து மந்திரியான உங்களுக்கே எங்கள் கஷ்டம் புரியவில்லை என்றால் வேறு யாருக்கு புரியப்போகிறது என அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடம் திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளனர்.