கே.என்.நேரு மகன் அரசியலுக்கு வருகிறாரா..? திடீர் போஸ்டரால் ஏற்பட்ட சர்ச்சை
திருச்சி: திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேருவின் மகன் அருண் நேருவை வரவேற்று திருச்சியில் புதிதாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தொழில் நடத்திக்கொண்டிருக்கும் அருணை நேருவின் ஆதரவாளர்கள் வலுக்கட்டாயமாக அரசியலுக்கு இழுத்து வரும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
ஆனால், தனது குடும்பத்தில் இருந்து தனக்கு அடுத்து யாரும் அரசியலுக்கு வரவேண்டாம் என்பதில் மிக உறுதியுடன் இருக்கிறார் கே.என்.நேரு.
மாவட்ட அரசியல்
திருச்சி மாவட்டத்தில் கடந்த 27 ஆண்டுகளாக மாவட்டச் செயலாளராக இருந்த கே.என்.நேரு இப்போது மாவட்ட அரசியலை கைவிட்டு மாநில அரசியலுக்கு சென்றுவிட்டார். திமுகவில் முதன்மை செயலாளராக உள்ள அவர், கூட்டணி விவகாரம், உட்கட்சி பஞ்சாயத்து போன்ற பணிகளை சென்னையில் இருந்தவாறு செய்துவருகிறார். இருப்பினும் தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் திருச்சிக்கு ஓடோடி சென்று கட்சி நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகள், தனது திருச்சி மேற்கு தொகுதி சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
கோபம்
கே.என்.நேருவை பொறுத்தவரை ஒரு நிர்வாகி தன்னை சந்திக்க வரும்போதே அவர் எதற்காக வருகிறார், என்ன கோரிக்கை வைப்பார் என்பதை முன்கூட்டியே யூகித்து வைத்துக்கொள்வார். இதனிடையே அவர் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டவுடன் அவரை சந்தித்த அவரது ஆதரவாளர்கள், தம்பியை (அருண் நேருவை) அரசியலுக்கு அழைத்து வாருங்கள் எனக் கூறியுள்ளனர். இதைக்கேட்டு கோபத்தின் உச்சிக்கே சென்ற நேரு, ''ஏன்யா, இப்படி இம்சை கொடுக்குறீங்க, அவன்பாட்டுக்கு தொழில் நடத்தி வருகிறான், அவனை கொண்டுவந்து வம்பில் மாட்டி விட பார்கிறீர்கள்'' எனகொதித்துள்ளார்.
போஸ்டர்
இதனிடையே நேருவுக்கு தனது மகனை அரசியலுக்கு அழைத்து வர துளியும் விருப்பம் இல்லாத நிலையில், அவரை கேட்காமலேயே சிலர் அருண் நேருவை மையமாக வைத்து திருச்சியில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதைப்பார்த்த சிலர் அருண் நேருவுக்கு இளைஞரணியில் முக்கிய பதவி கிடைக்கப்போவதாக செய்திகளை பரப்பினர். நேரு இப்போது பெரும்பாலான நேரம் சென்னையில் இருக்க வேண்டியுள்ளதால் திருச்சியில் நடக்கும் சில விஷேசங்களுக்கு தனது சார்பில் மகனை சென்றுவரும் படி கூறியுள்ளார்.
எவன் அடித்தான்
இதனிடையே போஸ்டர் சர்ச்சை தொடர்பாக திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேருவை தொடர்பு கொண்டு பேசிய போது, ''எங்கள் குடும்பத்தில் யாருக்கும் கட்சியில் நான் பதவி கேட்கவில்லை, யாரும் அரசியலுக்கும் வரமாட்டார்கள், எவன் போஸ்டர் அடித்தான், அவன் தேவைக்கு அடிச்சுட்டு இப்படித்தான் தர்மசங்கடத்தை ஏற்படுத்துவான், அது குறித்து நான் விசாரித்துக்கொள்கிறேன்'' என விளக்கம் அளித்தார்.