540 பேரில் 15 பேர் மட்டுமே தமிழர்கள்... என்ன நடக்கிறது ரயில்வேயில்... முற்றுகை நடத்திய அன்பில் மகேஷ்
திருச்சி: திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பழகுநர் பயிற்சி முடித்து தமிழக இளைஞர்கள் பணிக்காக காத்திருக்கும் சூழலில் வடமாநிலத்தவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரை முடிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே தொழில்நுட்பப் பணிக்காக தேர்வு செய்யப்பட்ட 540 பேரில் 15 பேர் மட்டுமே தமிழர்கள் உள்ள நிலையில் எஞ்சிய 525 பேரும் வடமாநிலத்தவர்கள் என்ற பகீர் புகார் எழுந்துள்ளது.
இதனிடையே திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை நிர்வாகத்தை கண்டித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முற்றுகைப் போராட்டம் நடத்தினார்.
பசங்களா! ஹேப்பி நியூஸ்!.. டிசம்பர் மாதம் வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாது.. மத்திய அரசு உறுதி
ரயில்வே பணிமனை
திருச்சி பொன்மலை ரயில்வேத் தொழிற்சாலையில், ரயில்வே பணியமர்த்து வாரியம் (ஆர்ஆர்பி) மூலம் கிரேடு-3 தொழில்நுட்பப் பணியாளர்கள் 540 பேருக்கு வேலை வழங்கிட சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் ராஜஸ்தான், பீகார், உத்திரப் பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர் மட்டும் 525 பேர் தேர்வாகியுள்ளனர். தமிழர்கள் என்று பார்த்தால் வெறும் 15 பேர் மட்டும் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புரியாத புதிர்?
கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்காக வட மாநிலத்தவர்கள் எப்படி திருச்சிக்கு வந்தார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது. ரயில்கள், பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் லாரிகளை மொத்தமாக வாடகைக்கு பிடித்து வந்திருக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே வெளிமாநிலத்தவர் இ-பாஸ் பெற்று திருச்சிக்கு வந்தார்களா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
கண்டனப் பதிவு
பொன்மலை பணிமனையில் பழகுநர் பயிற்சி (அப்ரண்டீஸ்) முடித்த தமிழக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பொன்மலை பணித்தேர்வு ஆணையை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என்றும், தகுதியுள்ள தமிழக பணியாளர்களுக்கே இந்த வேலைகளை கொடுக்க வேண்டும் எனவும் திமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.
அன்பில் மகேஷ்
தமிழகத்தில் மத்திய, மாநில அரசுப் பணிகளில் 90% வேலைவாய்ப்பை தமிழக இளைஞர்களுக்கு வழங்கிட வலியுறுத்தியும், தமிழக அரசு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலங்களில் இருந்தும் பணிக்கு வரலாம் என்ற அரசாணையை ரத்து செய்ய கோரியும் திமுக சார்பில் முற்றுகை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ. தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பை மத்திய அரசு தட்டி பறிக்கக்கூடாது என கண்டன முழக்கங்கள் எழுப்பினார்.