மு.க.ஸ்டாலின் தேசியத் தலைவராக உருவெடுத்துவிட்டார்... துரைமுருகன் பேச்சு
திருச்சி: முதலமைச்சராக வருவதற்கு முன்பே மு.க.ஸ்டாலின் ஒரு தேசிய தலைவராக உருவெடுத்துவிட்டார் என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
கருணாநிதி முதலமைச்சர் ஆகிய பின்பே அகில இந்திய தலைவர்கள் வரிசையில் வந்ததாகவும், ஆனால் இன்று ஒரு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போதே அகில இந்திய தலைவர்கள் பட்டியலில் ஸ்டாலினும் இடம்பெற்றுவிட்டார் என பெருமிதம் தெரிவித்தார்.
திருச்சியில் நடைபெற்ற திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போது துரைமுருகன் இதனைத் தெரிவித்தார்.
ஊழலுக்கு இடம் தராதீர்... விசுவாசமாக இருங்கள்... உருக்கமும், கண்டிப்பும் கலந்து ஸ்டாலின் பேச்சு
துரைமுருகன் உறுதி
வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வருவது உறுதியென்றும், மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது எனவும் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக நீதிமன்றம் சென்ற காரணத்தினால் தான் உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு நடத்தியதாகவும், ஸ்டாலின் ராஜதந்திரியாக செயல்படுகிறார் என்றும் துரைமுருகன் தெரிவித்தார். கிராமப்பகுதிகளில் மட்டும் முதற்கட்டமாக தேர்தலை நடத்தி அதிமுக அரசு ஆழம் பார்த்துள்ளதாக விமர்சித்தார்.
முதலமைச்சர்
கருணாநிதி கூட முதலமைச்சர் ஆகிய பின்பே அகில இந்திய தலைவர் ஆனார் என்றும், ஆனால் இன்று ஒரு எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போதே ஸ்டாலின் தேசியத்தலைவராக உருவெடுத்துள்ளார் எனவும் துரைமுருகன் புகழாரம் சூடினார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வராத வகையில் வாக்குகளை சிதறவைத்த கட்சிகளை இன்று தனது ராஜதந்திரத்தால் ஸ்டாலின் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தார். இன்று தமிழகத்தில் ஆட்சியா நடக்கிறது என கேள்வி எழுப்பியதோடு முதல்வர் மற்றும் அமைச்சர்களை கடுமையாக விமர்சித்தார்.
2-நாள் மாநாடு
திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை கே.என்.நேரு மிக பிரம்மாண்ட முறையில் ஏற்பாடு செய்துள்ளதாகவும், இப்படி ஒரு ஏற்பாடு செய்யப்படுகிறது என்பதை முன்பே தாம் அறிந்திருந்தால் முதல் நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு, 2-வது நாள் அரசியல் மாநாடு என 2 நாள் மாநாட்டை நடத்தியிருக்கலாம் என தாம் கூறியிருப்பேன் என துரைமுருகன் தெரிவித்தார். மேலும், நேரு 27 ஆண்டுகாலம் திருச்சி மாவட்டத்தில் திமுகவை கட்டிக்காத்து வருவதாகவும், அவரது உழைப்புக்கேற்ற வெகுமதியாக முதன்மைச் செயலாளர் பொறுப்பு தந்த ஸ்டாலின், தன்னுடன் இணைந்து பணியாற்ற நேருவை சென்னை அழைத்துச்சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார்.
தலைவர்கள்
உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்று, ஸ்டாலின் மட்டும் தூங்கியிருந்தால் மாநாட்டில் பங்கேற்றவர்களில் பலர் தலைவர்களாகவோ, கவுன்சிலர்களாகவோ வந்திருக்க முடியாது என்றும், முடிவுகளையே ஆளுங்கட்சிக்கு துணை போன சில அதிகாரிகள் மாற்றி அறிவித்திருப்பார்கள் எனவும் தெரிவித்தார். உங்களுக்காக, உங்கள் வெற்றிக்காக தூக்கத்தை துறந்து தேர்தல் ஆணையத்துக்கு சென்ற ஸ்டாலினுக்கு நன்றியுடன் செயல்பட வேண்டும் என உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் துரைமுருகன் கேட்டுக்கொண்டார்.