லாரி ஓட்டுநரின் முதுகில் சிக்கிய கட்டை.. ஆபரேஷனில் அகற்றம்.. திருச்சி மருத்துவர்கள் சாதனை
திருச்சி: லாரி ஓட்டுநரின் உடலில் சிக்கிய கட்டையை அகற்றி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்தவர் தாமரைக்கண்ணன். லாரி ஓட்டுநரான இவர், 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதுக்கோட்டை அருகே சென்றபோது, இவரது லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது.
அதில், ஒரு அடி நீளமுள்ள கட்டை இவரது முதுகின் கீழ் பகுதியில் மாட்டிக் கொண்டது. இதையடுத்து, மிக ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
அதன்பின் நரம்பியல் மருத்துவர்கள், மயக்க மருந்து நிபுணர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அவரது வயிற்றை முழுமையாக இரண்டாக பிளந்து எவ்வித பாதிப்புமின்றி கட்டையை மருத்துவர்கள் அகற்றினர்.
குணம் அடைந்தார்
அதிர்ஷ்டவசமாக கட்டையாலும், அதிலிருந்த ஆணியாலும் தாமரைக் கண்ணனின் உடல் நரம்புகளும், உறுப்புகளும் சேதம் ஆகவில்லை. தற்போது, பூரண குணமடைந்து மறுபடியும் அவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
மருத்துவக்குழு பேட்டி
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி தனியார் மருத்துவமனை மருத்துவர் வேல்முருகன், லாரி ஓட்டுநர் தாமரைக்கண்ணனுக்கு தானும், நரம்பியல் மருத்துவர் குழுவினரும் அறுவை சிகிச்சை மேற்கொண்டோம்.
வயிற்றை பிளந்து சிகிச்சை
அவரது வயிற்றை இரண்டாக பிளந்து எவ்வித பாதிப்புமின்றி கட்டையை அகற்றினோம். விபத்தின்போது கத்தி, கட்டை, கம்பி உள்ளிட்ட ஆயுதங்கள் உடலில் சிக்கினால், அவற்றை உடனடியாக வெளியே எடுக்க முயற்சிக்க கூடாது.
சாலை விபத்து, அறிவுரை
மருத்துவமனைக்கு சென்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் தான் எடுக்க வேண்டும். மேலும், சாலை விபத்தில் படுகாயத்துடன் இருப்பவர்களை ஆம்புலன்ஸ் வரவழைத்து ஸ்ட்ரெச்சர் மூலமே அழைத்து வர வேண்டும். கைகளை கொண்டு தூக்குவதால் அவர்களது உடல் எலும்புகள் பாதிப்பு ஏற்படும் என்று கூறினார்.