வீரமணி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் செருப்பு வீச்சு! தி.க.வினர் 2 பேரின் மண்டை உடைப்பு
திருச்சி: காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தி.க.தலைவர் வீரமணி பேச வந்த பிரச்சாரக் கூட்ட மேடையில் இந்து முன்னணியினர் செருப்புகளை வீசியதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது.
திருச்சி மக்களவை தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து இன்று திருச்சியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கற்க இன்று வந்திருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பிரச்சார மேடையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்து இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் திடீரென மேடையை நோக்கி செருப்புகளை வீசியுள்ளனர்.
தலைமைச் செயலகம் அருகே கஞ்சா விற்ற பெண்... வாங்க வந்தவரின் வாகனத்தை நொறுக்கிய போலீஸ்!
அப்போது நடந்த வன்முறையில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தொண்டர்கள் இரண்டு பேர் தாக்கப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் மண்டை உடைந்தது. மேலும் காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டதுக்கு கட்டப்பட்டிருந்த மின்விளக்குகளும் அடித்து நொறுக்கப்பட்டன.
இதனால் காங்கிரஸ் பிரச்சாரக்கூட்டம் நடைபெறும் இடம் அருகே பதற்றமான சூழல் காணப்படுகிறது. இதனால் அசம்பாவிதத்தை தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.