ஜெ. மாதிரி வேணும்.. ரஜினிகாந்த் அரசியலுக்கு வரணும்.. அனுகீர்த்தி வாஸுக்கு வந்த ஆசையைப் பாருங்களேன்!
திருச்சி: தமிழக அரசியலை பொறுத்தவரை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைபோல ஆளுமை திறன்மிக்கவர்கள் யாரும் இல்லை அவர் மறைந்தாலும் இன்னமும் அவரை பற்றி நாம் பேசுகிறோம். ஜெயலலிதா போன்ற பெண்கள் அரசியலில் உருவாக வேண்டும் என
திருச்சியில் முன்னாள் இந்திய அழகி அனுகீர்த்திவாஸ் பேட்டி அளித்துள்ளார்.
ரோட்டரி மாவட்டம் 3,000த்துடன் பிரியசகி மற்றும் அனைத்து பெண்கள் ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்திய 'ராயல் குயின்ஸ்' என்ற பெயரில் பெண்கள் தின விழா மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் ஹோட்டலில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், 'பெமினா மிஸ் இந்தியா' பட்டம் வென்ற திருச்சி பெண்அனுகீா்த்தி வாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினாா்.
பாராட்டு
வீகோ் நிறுவனத் தலைவா் கரோலின் பிரபா ரெட்டி கெளரவ விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினா். நிகழ்ச்சியில், திருச்சி, மதுரை, கரூா், திண்டுக்கல், புதுக்கோட்டை , தேனி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த ரோட்டரி சங்க நிா்வாகிகள் கெளரவிக்கப்பட்டனா். இதே போல புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு கூந்தல் தானம் செய்த, வருங்காலத்தில் செய்ய உள்ள காவேரி மகளிா் கல்லூரியைச் சோ்ந்த மாணவிகள் கெளரவிக்கப்பட்டு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
வழிமுறைகள்
தொடா்ந்து திருச்சி மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனை முன்னாள் முதல்வா் அனிதா, கரோனா வைரஸ் குறித்தும், அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் பேசினாா். முன்னதாக நிகழ்ச்சியின் தலைவா் அல்லிராணி பாலாஜி வரவேற்றாா்.செயலா் பிரியா கோவிந்தராஜ் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை பொருளாளா் சுசீலா சுரேஷ் செய்திருந்தாா்.
அதிகாரப்பூர்வம்
பின்னர் திருச்சி காட்டூரை சேர்ந்த முன்னாள் இந்திய அழகி அனுகீர்த்திவாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: 2018-ம் ஆண்டு நான், பெமினா இந்திய அழகியாக தேர்வு பெற்றேன். சொந்த ஊர் திருச்சி காட்டூர். தற்போது சென்னையில் குடும்பத்துடன் குடியேறி விட்டேன். இந்திய அழகியாக தேர்வு பெற்றதையொட்டி, தற்போது 2 சினிமா படங்களில் நடிப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வில்லை.
50 சதவீத இடஒதுக்கீடு
தற்போது கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. எனவே, அனைவரிடமும் விழிப்புணர்வும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்வது அவசியம். தொடர்ந்து பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சமூக மேம்பாட்டிற்காகவும் நான் பாடுபடுவேன். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதுபோல அனைத்துத் துறைகளிலும் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
குழந்தைகள்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இந்தியாவில் அதிகரித்துள்ளது. பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுபவர்கள் மீது, சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் தண்டனை கடுமையாக இருப்பதுடன் உடனடியாக வழங்கப்பட்டு விடுகிறது. இதனால், அங்கு தப்பு செய்யவே பயப்படுகிறார்கள். இந்தியாவில் அதுபோன்ற கடுமையான தண்டனை சட்டம் இல்லாததால் பெரிய பெரிய ஆட்கள் தப்பு செய்து விட்டு எளிதாக, தப்பி விடுகிறார்கள். நிர்பயா வழக்கில், குற்றவாளிக்கு தண்டனை அறிவித்தாலும் அது நிறைவேற்றப்படாமல் காலதாமதப்படுத்தப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா
தமிழக அரசியலை பொறுத்தவரை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைபோல ஆளுமை திறன்மிக்கவர்கள் யாரும் இல்லை. அவர் மறைந்தாலும் இன்னமும் அவரை பற்றி நாம் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். அவரைப் போன்ற பெண்கள் அரசியலில் உருவாக வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய ஆளுமை திறன்மிக்க ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும். இதேபோல் மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மேலும் இன்றைய இளம் தலைமுறையினர் அரசியலுக்கு ஆர்வமாக வரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.