மீண்டும் துயரம்... புயலால் வாழைகள் நாசம்.. லால்குடி விவசாயி தற்கொலை
திருச்சி : கஜா புயலால் சேதம் அடைந்த வாழைத்தோட்டத்திலேயே, விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி சுண்ணாம்புகார தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (42). விவசாயி. இவரது மனைவி தேவி. ரவிச்சந்திரன் 2½ ஏக்கர் பரப்பளவில் வாழை நடவு செய்து இருந்தார். பொங்கல் பண்டிகையையொட்டி வாழைத்தார் வெட்டும் தருவாயில் இருந்தது. இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி தாக்கிய கஜா புயலால் ரவிச்சந்திரன் பயிரிட்டு இருந்த சுமார் 2,500 வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. பெங்களூரு சென்று இருந்த ரவிச்சந்திரனுக்கு இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி அவர் வீடு திரும்பினார்.
புயலால் சாய்ந்த வாழை மரங்களை பார்ப்பதற்காக அவர் வயலுக்கு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ரவிச்சந்திரனின் வாழைத்தோட்டத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு ரவிச்சந்திரன் வாழை சேதம் அடைந்த விரக்தியில் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தது தெரிய வந்தது. இதையடுத்து ரவிச்சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 4 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்த நிலையில் காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கஜா புயலுக்கு வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து நாசமானதால் விவசாயி வாழைத்தோட்டத்திலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊருக்கே சோறு போட்ட, டெல்டா பகுதி விவசாயிகளின் தொடர் மரணம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. விவசாயிகளின் தற்கொலையை தடுக்க அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.