விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு... டெல்லி செல்ல முயன்ற அய்யாக்கண்ணு திருச்சியில் கைது
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லி செல்ல முயன்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி: விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க டெல்லிக்குப் புறப்பட்ட தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யக்கண்ணு உள்ளிட்ட ஏராளமான விவசாயிகளை திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர் .புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் அய்யாக்கண்ணு.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் விவசாயிகள் கடந்த 8 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரிலும் அசராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். லட்சக்கணக்கான விவசாயிகளின் போராட்டத்தினால் டெல்லி திணறி வருகிறது. டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும், அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த போராட்டத்தில் பங்கேற்று, ஆதரவு தெரிவிப்பதற்காக திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ரயில் நிலையம் வந்தனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், அனைவரையும் கைதுசெய்து அழைத்துச்சென்றனர்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்குச் சென்று போராட முடிவெடுத்து கடந்த நவம்பர் 24ஆம் தேதியன்று பி.அய்யாக்கண்ணு தலைமையில் புறப்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதுடன், அய்யாக்கண்ணுவை வீட்டுக்காவலில் வைத்தனர்.
இதையடுத்து அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் பாதித் தலையை மொட்டையடித்துக் கொண்டதுடன், மீசை- தாடியையும் பாதியளவு மழித்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து நவம்பர் 30ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பிரதமர் மோடிக்குக் கோரிக்கைகள் அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தை ராக்கெட் போல் மடித்து ஏவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சபரிமலை : தவம் செய்யும் இடத்தை அம்பு எய்து தேர்வு செய்த ஐயப்பன்... ஆலயம் எழுப்பிய பரசுராமர்
மீண்டும் டெல்லி செல்ல வந்த அய்யாக்கண்ணு உட்பட விவசாயிகளை, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையப் பிரதான நுழைவுவாயில் முன் காவல்துறையினர் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, "டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் சேர்ந்து போராடுவதற்காக கடந்த 24ஆம் தேதி புறப்படவிருந்த எங்களைக் காவல் துறையினர் தடுத்தனர். இன்றும் எங்களைப் புறப்படவிடாமல் தடுத்து விட்டனர்.
மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.