மேட்டூரில் இருந்து முக்கொம்புக்கு பொங்கி வந்த காவேரி... நெல்மணிகள், மலர்கள் தூவி வரவேற்ற விவசாயிகள்
மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது நெல்மணிகள் மலர்கள் தூவிய விவசாயிகள் வரவேற்பு அளித்தனர்.
திருச்சி: குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் இன்று காலை முக்கொம்பு வந்தடைந்தது. பொங்கி பிரவாகம் எடுத்து ஓடி வந்த காவிரி அன்னையை மலர்களை தூவியும், நெல் மணிகளை தூவியும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
Recommended Video
டெல்டா மாவட்ட விவசாயிகளின் ஜீவாதார நதி காவிரி. ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் காவிரி அன்னைக்கு விழா எடுப்பார்கள். ஆடிப்பெருக்கு விழா காவிரி பாயும் ஆற்றக்கரைகளில் களைகட்டும். மலர்களை தூவியும், உணவுகளை சமைத்து வந்தும் காதோலை கருகமணி படைத்தும் காவிரியை வணங்கி வழிபடுவார்கள்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு காவிரி தங்கை முறையாக கொண்டாடப்படுகிறார். ஆண்டுதோறும் தனது சகோதரி காவிரிக்கு சீர் கொண்டு வந்து கொடுப்பார் ரங்கநாதர். தங்கக் குடத்தில் காவிரி நீரை எடுத்துக்கொண்டு போய் ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கும் நம்பெருமாளுக்கும் அபிஷேகம் செய்வார்கள்.
குறுவை சாகுபடியை அதிகரிப்பதே எங்கள் இலக்கு...மேட்டூர் அணையை திறந்து வைத்து மு.க ஸ்டாலின் பேச்சு
காவிரித்தாய் அபிஷேகம்
ஆனி மாதம் கேட்டை நட்சத்திர நாளில் நம்பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெறும். நம்பெருமாள் அணிந்திருக்கும் தங்கக் கவசம் களையப்பட்டு 22 குடங்களில் காவிரி தீர்த்த அபிஷேகம் நடைபெறும். இந்த அபிஷேகத்தை காவிரியே செய்வதாக ஐதீகம் உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த காவிரித்தாய் திருச்சிக்கு எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்படுவது உண்டு.
மு.க ஸ்டாலின் தண்ணீர் திறப்பு
தமிழக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகளுக்காக கடந்த 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். தற்போது மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
பொங்கி வந்த காவிரி
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரானது இன்று காலை முக்கொம்பு அணையை வந்தடைந்தது. சலசலவென ஓடி வந்த காவிரியை கண்ட உடன் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்காகத்தான் இத்தனை நாட்களாக காத்திருந்தோம் என்று கூறி வழிபட்டனர்.
விவசாயிகள் வழிபாடு
காவிரி அன்னைக்கு அங்கிருந்த தமிழக விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் விவசாயிகள் ஒன்று திரண்டு நெல் மணி மற்றும் மலர் தூவி வணங்கி நன்றி கூறினர். இந்த தண்ணீர் மூலம் திருச்சி உள்பட 12 மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் பயணடைவார்கள்.
கல்லணைக்கு பாய்ந்த காவிரி
முக்கொம்பு மேலணையிலிருந்து 41 மதகுகள் வழியாக வினாடிக்கு 2,000கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்ட தண்ணீர் சீறிப்பாய்ந்தது. தற்போது திறக்கப்பட்டுள்ள காவிரிநீர் இரவுக்குள் கல்லணை சென்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்லணையிலிருந்து காவிரி நீர் நாளை திறந்து விடப்பட உள்ளது.