விலை கிடைக்காத வாழைத்தார்கள்... இலவசமாக கொடுத்து நெகிழ வைத்த விவசாயிகள்..
திருச்சி: ஊரடங்கு காரணமாக வாழைப்பழங்களை சந்தைப்படுத்த முடியாததால், அவற்றை இலவசமாக கொடுத்து நெகிழவைத்துள்ளனர் திருச்சி மாவட்ட வாழை விவசாயிகள்.
காவிரி கரையோர பகுதிகளான திருச்சி மாவட்டம் குடமுருட்டியில் தொடங்கி கரூர் மாவட்டம் குளித்தலை வரை வாழை சாகுபடி அதிகளவில் நடைபெறும். இதேபோல், குளித்தலை, அய்யர்மலை பகுதிகளிலும் பெரியளவில் வாழை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வாழைத்தார்களை விவசாயிகளால் சந்தைப்படுத்த முடியாமல் தடுமாறி வருகின்றனர்.
வியாபாரிகள் மிகவும் சொற்ப விலைக்கு வாழைத்தார்களை கேட்பதால் அதற்கு கொடுக்க மனமின்றி தூய்மைப் பணியாளர்களுக்கும், பசியால் வாடுபவர்களுக்கு இலவசமாகவே வாழைப்பழங்களை தருவது என முடிவெடுத்தனர். அதனடிப்படையில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 20,000 வாழைப்பழங்களை திருச்சி மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்து அதனை ஏழை எளியோருக்கும், துப்புரவு பணியாளர்களுக்கு கொடுக்குமாறு நெகிழ வைத்துள்ளனர்.
வாழை விவசாயிகளின் இந்த மனிதநேய உதவிக்கு திருச்சி மாநகராட்சி ஆணையர் உட்பட அதிகாரிகள் நன்றி தெரிவித்துக்கொண்டனர். விவசாயிகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில் மாநகராட்சியில் தூய்மைப் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு சீப் வாழைப்பழங்கள் கொடுக்கப்பட்டன.
இதனிடையே இனி வரும் காலத்தில் வாழைப்பழத்திற்கு அரசே விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளால் குளிர்பதனக்கிடங்கில் பழங்களை சேமிக்க முடியாததால் இப்படி இனாமாக வழங்கி வருவதாகவும் வாழை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அடங்காத கோயம்பேடு கேஸ்கள்.. தினமும் விரட்டும் கொரோனா கிளஸ்டர்.. விடைதெரியாத சில கேள்விகள்!