கொரோனா இல்லாத திருச்சி: வீடு வீடாக பரிசோதனை காய்ச்சல் முகாம்கள் - கலெக்டர் சிவராசு
மதுரையை போல் திருச்சியிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தும் அவசியம் இல்லை கடந்த மாதத்தை விட இந்த மாதத்தில் பரவல் குறைவாக தான் இருக்கிறது என்று மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்தார்.
திருச்சி: கொரோனா தொற்று பரவும் விகிதம் திருச்சி மாவட்டத்தில் 13 சதவிகிதம் என்ற நிலையிலிருந்து. 6.5 சதவிகிதம் வரை குறைந்துள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறியுள்ளார். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகிய இரண்டையும் தவறாமல் கடைப்பிடித்தால் அடுத்த 3 மாதங்களில் கொரோனா தொற்றே இல்லை என்ற நிலையை உருவாக்க முடியும், தனிமைப்படுத்தப்பட்டோர் விதிகளை மீறி வெளியே சுற்றினால் வழக்குப் பதியப்படும் என்றும் தெரிவித்துள்ளார் ஆட்சியர் சிவராசு.
திருச்சி மாநகராட்சிப் பகுதியில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்புப் பணிளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் சிவராசு. செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தொற்று அதிகமாக இருந்ததால் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பொன்மலை, கோ. அபிஷேகபுரம், அரியமங்கலம், ஸ்ரீரங்கம் ஆகிய 4 கோட்டங்களுக்குள்பட்ட 65 வார்டுகளிலும் தினமும் ஒவ்வொரு பகுதியாக முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில் சாதாரணக் காய்ச்சல், இருமல், சளி இருந்தால் அதற்கான மருந்து, மாத்திரை வழங்கி உரிய ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன. கொரோனா அறிகுறிகள் இருப்போரை அடையாளம் கண்டு அவா்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி சளி மாதிரி எடுக்கப்படுகிறது.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட ஒரு வார்டில் மட்டும் அதிகபட்சமாக 19 பேருக்கு தொற்று பரவியது. இதற்கு அடுத்தபடியாக ஒரே பகுதியில் அதிகளவிலான தொற்று பதிவாகவில்லை. புதிய பகுதிகளிலும் ஒரே பகுதியில் அதிகத் தொற்று இல்லை. கண்டறியப்படும் தொற்று அனைத்தும் ஒன்று அல்லது அதிகபட்சமாக 4 என்ற எண்ணிக்கையில்தான் உள்ளது.
சென்னையிலிருந்து வந்தோர் ஏற்கெனவே தொற்று பாதித்தோருடன் தொடா்பில் இருந்தவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் வீடு, வீடாகப் பரிசோதனை நடத்தப்படுகிறது. இதற்காக மாநகராட்சி ஊழியா்கள், சுகாதாரத் துறையினா், காசநோய் பணியாளா்கள், ஒப்பந்தத் தொழிலாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ஒரு பணியாளா் நாளொன்றுக்கு 50 முதல் 70 வீடுகளுக்குச் சென்று கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை ஆய்வு செய்கிறார்கள்.
திருச்சி மாவட்டத்தைப் பொருத்தவரை முன் அதிகபட்சமாக 2 ஆயிரம் மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. தற்போது, நாளொன்றுக்கு 1,400 மாதிரிகள் என்ற நிலைக்கு வந்துள்ளது. நாளொன்றுக்கு 1,050 மாதிரிகளை ஆய்வகத்தில் சோதனை செய்ய இயலும்.
திருச்சி அரசு மருத்துவமனையைத் தவிர்த்து மேலும் 5 தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதில், 4 ஆய்வகங்கள் திங்கள்கிழமை முதல் பரிசோதனையைத் தொடங்கவுள்ளன. பரிசோதனை முடிவு அறிவிக்க அதிகபட்சம் 2 நாள் அவகாசம் தேவைப்படுகிறது. முடிந்தவரை விரைந்து வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
திருச்சியில் 14 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. இவற்றில், புதிய தொற்று என்பது கடந்த 3 நாள்களாக கண்டறியப்படவில்லை. பரிசோதனை மாதிரி எடுக்கப்படுவோர் 2 நாள்களுக்கு வெளியே செல்ல முடியாத வகையில் ஆரஞ்ச் வண்ண ஸ்டிக்கா் ஒட்டப்படுகிறது. பரிசோதனை முடிவுக்காகக் காத்திருப்பதாக குறிப்பிட்டு அறிவிக்கப்படுகிறது. இருப்பினும், தனிமைப்படுத்தப்பட்டோர் விதிகளை மீறி வெளியே வருவதாகப் புகார்கள் வருகின்றன. அவா்கள் மீது வழக்குப் பதியப்படும்.
மாவட்டத்தில் தொற்று பரவும் விகிதம் 13 விழுக்காடு என்ற நிலையிலிருந்து. 6.5 விழுக்காடு வரை குறைந்துள்ளது. எனவே, மதுரையைப் போல முழு முடக்கத்தை அமல்படுத்தத் தேவையிருக்காது. இருப்பினும், அரசு அறிவித்த பொது முடக்கக் கட்டுப்பாடுகள் ஜூலை 31 வரை தொடா்ந்து அமலில் இருக்கும். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகிய இரண்டையும் தவறாமல் கடைப்பிடித்தால் அடுத்த 3 மாதங்களில் கொரோனா தொற்றே இல்லை என்ற நிலையை உருவாக்க முடியும் .
திருச்சி மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்த 27 பேரில் 60 வயதுக்கு மேற்பட்ட நபா்கள் 24 போ் உயிரிழந்துள்ளனா். 3 போ் மட்டுமே 60 வயதுக்கு கீழ் உள்ளவா்கள். இவா்களில் ஒருவருக்கு சிறுநீரகப் பாதிப்பு இருந்தது. மற்றொரு இளைஞா் விபத்தில் காயமடைந்தவா். திருச்சி மாநகராட்சியில் முன் களப் பணியாளா்களில் இதுவரை 43 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இவா்களில் பலா் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனா்.
மாவட்ட ஆட்சியரகத்தில் பணிபுரியும் 3 பேருக்கு, வெளியூா் சென்று வந்ததால் தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. அவா்களும் குணமாகியுள்ளனா். அவசியத் தேவை இருந்தால் மட்டுமே இ-பாஸ் அனுமதிக்கப்படுகிறது. நாளொன்றுக்கு பெறப்படும் விண்ணப்பங்களில் 12 முதல் 15 சதம் மட்டுமே உரிய காரணங்கள் என்ற வகையில் அனுமதிக்கப்படுகிறது என்று கூறினார்.