சின்னம் எங்களுக்கு ஒரு பிரச்சனையே இல்லை... திமுகவை நம்ப மக்கள் இனியும் தயாராக இல்லை -ஜி.கே.வாசன்
திருச்சி: திமுகவை நம்ப மக்கள் இனியும் தயாராக இல்லை என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் இதனைக் கூறினார். ராஜ்யசபா எம்.பி.யாக பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக திருச்சி வந்ததால் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் வாசனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது பேசிய அவர், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விவசாய சட்டங்கள் மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் திமுக தவறான தகவலை பரப்பி வருவதாக தெரிவித்தார். திமுக மக்களிடம் பொய்ப்பிரச்சாரம் செய்து வருவதாகவும் இதனை இனியும் தமிழக மக்கள் நம்ப தயாராக இல்லை எனவும் கூறினார்.
அதிமுக கூட்டணியை பொறுத்தவரை ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிவடையும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக ஜி.கே.வாசன் கூறினார். அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சின்னம் ஒரு பிரச்சனையே கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை தாம் முழு மனதுடன் வரவேற்பதாகவும் கட்சி நலன் மட்டுமல்லாமல் தமிழக நலனையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு இதுவென்றும் வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பொதுவெளியில் பொதுவாகவே பிறக் கட்சிகள் மீது விமர்சனம் செய்வதை தவிர்க்கும் நாகரீகம் கொண்ட வாசன், ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்றது முதல் அவரது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிகிறது. வாலண்டியராக வந்து திமுகவை வசைபாடியுள்ளார்.