"பொட்டு தங்கம் இல்லை.. எல்லாத்தையும்தான் தந்துட்டேனே"... கையை விரித்த முருகன்.. விசாரணையில் ஷாக்!
7 நாள் முருகனிடம் விசாரணை நடத்தப்பட்டது
திருச்சி: "பொட்டு தங்கம்கூட இல்லை.. என்கிட்ட எங்கே இருக்கு நகைகள்? எல்லாத்தையும்தான் பெங்களூரு போலீசில் தந்துட்டேனே.." என்று கொள்ளையன் முருகன் விசாரணையின்போது தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
லலிதா ஜுவல்லரி கொள்ளையன் முருகனை தமிழக போலீசார் இங்கு தீவிரமாக தேடி வந்த நிலையில், திடீரென பெங்களூரு கோர்ட்டில் சரணடைந்தான். இதையடுத்து, சிறையில் அடைத்த முருகனை ஒரு திருட்டு வழக்கில் தொடர்புள்ளதால், பெங்களுர் போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர்.
அந்த சமயத்தில்தான் லலிதா ஜுவல்லரியில் கொள்ளை அடித்த நகைகளை கொள்ளிடம் ஆற்றுமணலில் புதைத்து வைத்திருப்பதாக முருகன் சொல்லவும், அதை மீட்க தமிழகம் வரும்போது நம் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து கொண்டனர். பின்னர், புதைக்கப்பட்ட நகைகளை மீட்டு கோர்ட்டிலும் தெரியப்படுத்தினர்.
ரகசிய இடம்
இதனிடையே, முருகனை காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி போலீசார் முயற்சிகளை மேற்கொண்டு வந்த நிலையில், திருச்சி மாவட்ட குற்றவியல் 2-வது மாஜிஸ்ட்ரேட் திரிவேணியும் அதற்கு அனுமதி அளித்தார். இந்த உத்தரவையடுத்து, பெங்களூரு கோர்ட்டில் தெரியப்படுத்திவிட்டு, முருகனை திருச்சிக்கு நம் போலீசார் கடந்த 26-ம் தேதி அழைத்து வந்து மத்திய சிறையில் அடைத்தனர்.
சினிமா படம்
முன்னதாக கோர்ட்டில் ஆஜர்படுத்தும்போது செய்தியாளர்களிடம் ஓரிரு வார்த்தைகள் முருகன் பேசினான். அப்போது, "சினிமா படம் புரொடியூஸ் பண்ண ரொம்ப ஆசை.. 2 படமும் எடுத்தேன்.. என் கஷ்ட காலம் அந்த படங்கள் ரிலீஸ் ஆகல.. திரும்பவும் படம் எடுக்கணும்.. என்கிட்ட நிறைய திறமை இருக்கு.." என்றான். இதையடுத்து, போலீசார் கோர்ட் அனுமதியுடன் 7 நாள் முருகனை கஸ்டடியில் எடுத்து... ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.
பரபரப்பு தகவல்
ஆனால், முக்கியமான மற்றும் பரபரப்பு தகவல்களை முருகன் சொல்லவில்லை போல தெரிகிறது. அதேபோல, கொள்ளை அடித்த மீதி நகைகள் குறித்து கேட்டதற்கு, "என்கிட்ட எங்கே இருக்கு நகைகள்? பொட்டு தங்கம்கூட இல்லை.. எல்லாத்தையும்தான் பெங்களூரு போலீசில் தந்துட்டேனே.. வேற இடத்துல கொள்ளையடித்த நகைகளை யாரிடமாவது கொடுத்து வெச்சிருக்கானா என்று யோசித்து சொல்றேன்" என்று சொன்னானாம்.
உடல்நிலை
போலீஸ் கஸ்டடி என்றாலும் முருகனை தங்கள் பாணியில் விசாரிக்க முடியவில்லையாம். ஏற்கனவே முருகனுக்கு உடம்பு சரியில்லை.. இதில் சில நாட்களாக காய்ச்சலும் அதிகமாகி உள்ளது. அதனால், விஷயத்தை வாங்க முடியாமல் போலீசார் கையை பிசைந்து நிற்கின்றனராம். இப்போது இந்த 7 நாள் கஸ்டடியும் முடிந்துவிட்டது.
நம்பிக்கை
அதேபோல, இதுவரை கொள்ளையடித்த மொத்த நகைகளையும் மீட்க முடியாமல் போலீசார் உள்ளனர். எனினும் முருகனிடம் மொத்த விஷயத்தையும் கறந்துவிடுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கும் நம் போலீசார், முருகனின் கூட்டாளிகள் மகேந்திரன், பிரசன்னா உள்ளிட்ட நகை வியாபாரிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.