ஏம்ப்பா.. இந்த ரோடு இப்படி தாறுமாறா இருக்கே..கவுன்சிலர் ரேஞ்சுக்கு டுபாக்கூர் விட்ட திருட்டு முருகன்
கொள்ளையன் முருகன் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது
Recommended Video
திருச்சி: எப்படி கொள்ளையடிக்கணும் என்று ரூம் போட்டு எல்லாம் யோசிக்கல.. இதுக்காக ஒரு வீட்டையே வாடகைக்கு பிடித்துள்ளார் கேங் லீடர் முருகன்! அது மட்டுமில்லை.. "ஏம்ப்பா.. இந்த ரோடு இப்படி குண்டும், குழியுமா இருக்கு.. ஏதாவது பண்ணனுமே, பணம் கலெக்ட் பண்ணுங்க.. நானும் தரேன்" என்று ஒரு கவுன்சிலர் ரேஞ்சுக்கு பேசியுள்ளார் முருகன்!
லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முக்கியமான குற்றவாளிதான் முருகன்.. பட அதிபர், கொள்ளையன், ஏடிஎம் திருடன், நாடு முழுவதும் கை வரிசையை காட்டியவர்.. சுவரில் ஓட்டை போடுவதில் கில்லாடி.. கார் ரேஸில் படு சுட்டி.. போலீசுக்கே பல நேரங்களில் தண்ணி காட்டி எஸ். ஆனவர்.. இப்படி தேசிய அளவிலானகொள்ளையனை போலீசார் தேடி வருகிறார்கள்.
வேனுக்குள்ளயே சுற்றி வருகிறாராம்.. எங்கே என்றுதான் தெரியவில்லை. அதனால் இவரை எப்படியாவது பிடித்துவிட நம் போலீசார் முயன்று வருகிறார்கள். அதனால் முருகன் தொடர்பாக சில செய்திகளும் அவ்வப்போது வெளியே வந்து கொண்டே இருக்கிறது.
கொள்ளை
அதன்படி, முருகன் லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்க ஒரு வீட்டையே வாடகைக்கு பிடித்து வைத்திருந்தது இப்போது தெரியவந்துள்ளது. எங்கே கொள்ளையடிப்பதானாலும், அதற்காக ஒரு வீட்டையே வாடகைக்கு பிடித்து கொள்வாராம் முருகன். அந்த வீட்டில் இருந்துதான் எல்லா பிளானும் போடப்படும். கொள்ளை பக்காவாக முடிந்ததும், அந்த வீட்டை உடனே காலி செய்துவிட்டு தலைமறைவாகி விடுவாராம்.
வாடகை வீடு
அதன்படி, ஒரு மாசத்திற்கு முன்பு திருச்சி திருவரம்பூரை அடுத்த வேங்கூர் நரிக்குறவர் நாயக்கர் ரோடு அரசாயி அம்மன் கோயில் அருகே ஒரு வீட்டில் 2மாத காலம் தங்கி இருந்து கொள்ளைக்கு ஸ்கெட்ச் போட்டுள்ளான். இந்த தகவல் போலீசாருக்கு கிடைக்கவும் அதிரடியாக அங்கு சென்று பார்த்தனர். ஆனால் வீட்டுக்குள் எதுவுமே இல்லை. மாசம் 6 ஆயிரம் ரூபாய் வாடகையாம். 60 ஆயிரம் அட்வான்சாம்.
நாய்
அதைகொடுத்து தான் முருகன், அவனது மனைவி மஞ்சுளா, குழந்தைகள், கூடவே ஒரு வளர்ப்பு நாய்.. என மொத்தமாக இந்த வீட்டில் இருந்திருக்கிறார்கள். இந்த வீட்டின் ஹவுஸ் ஓனர் பெயர் ஷேக் அப்துல்லா. இவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..
மேல் பூட்டு
போன 1ம் தேதி வீட்டுக்கு வாடகை கொடுத்த முருகனை அதற்கு பிறகு காணோம் என்கிறார்கள். மறுநாள்தான் லலிதா ஜுவல்லரி கொள்ளை நடந்தது. அதற்கு பிறகு இந்த வீட்டுக்கும் வரவில்லை. அதனால் அந்த வீட்டுக்கு போலீசார் மேல்பூட்டு போட்டுள்ளனர்.
பணம்
இந்த வீட்டில் இருந்ததே 2 மாசம்தான்.. ஆனால், தெருவில் போகும்போது, "ஏன் இந்த தெருவுல இப்படி குண்டும் குழியுமாக ரோடு இருக்கு.. அதை சரி செய்யணுமே.. முடிந்த அளவிற்கு நீங்க பணத்தை திரட்டுங்க, மீதி எவ்ளோ தேவைப்படுதோ நான் தர்றேன்" என்று அந்த பகுதிவாசிகளிடம் முருகன் சொல்லி இருக்கிறான். 2 கார்களில் முருகன் அடிக்கடி வெளியே போய்ட்டு வருவதை பார்த்திருக்கிறோம் என்றும் அந்த பகுதி மக்கள் சொல்கிறார்கள். 1-ம் தேதிக்கு பிறகு இவர்களும் முருகனை அந்த பக்கம் பார்க்கவே இல்லையாம்.எனினும் போலீசாரின் தேடுதல் வேட்டை தொடர்கிறது.