வருது வருது பக்ரீத்.. களை கட்டியது ஆட்டு சந்தை.. திருச்சி சமயபுரத்தில் செம சேல்ஸ்!
பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஆட்டு சந்தை சமயபுரத்தில் களை கட்டி உள்ளது
திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் ஒத்தக்கடை பகுதியில் உள்ள ஆட்டுச்சந்தை தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தைகளில் ஒன்று. சனிக்கிழமைதோறும் நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தையில் ஆயிரம் முதல் பத்தாயிரம் ஆடுகள்வரை விற்பனையாவது வழக்கம்.
இந்த சந்தைக்கு திருச்சி மட்டுமல்லாது தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் ஆடு வளர்ப்பவர்கள், ஆட்டு வியாபாரிகள் வருவது வழக்கம். பக்ரீத் பண்டிகை நாளை மறுதினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று சமயபுரத்தில் ஆட்டுச்சந்தையில் வியாபாரம் களை கட்டியது. ஆட்டுச்சந்தையில் வழக்கத்தைவிட அதிக எண்ணிக்கையில் ஆடுகள் குவிந்தன.
இதில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தஞ்சாவூர், நாமக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆட்டு வியாபாரிகள் லாரி லாரியாக ஆடுகளை கொண்டு வந்திருந்தனர்.
இன்று அதிகாலை 4 மணிக்கு துவங்கி ரூ.15 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை எடைக்கு தகுந்தாற்போல் ஆயிரக்கணக்கான ஆடுகளின் விற்பனை ஜரூராக உள்ளது. வழக்கத்திற்கு மாறாக ஆடுகள் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.