மணப்பாறை அருகே மாப்பிள்ளை சம்பா நெல் பயிரிட்டு அதிக மகசூல் ஈட்டிய அரசு ஊழியர்
திருச்சி: மணப்பாறை அருகே அரசு ஊழியர் ஒருவர் பழமையான நெல் ரகமான மாப்பிள்ளை சம்பாவை பயிரிட்டு அதிகமகசூல் பெற்று விவசாயிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
"உணவே மருந்து" என்ற இருந்த காலம் போய் தற்போது மருந்திற்காக உணவு உண்ண வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு விதமான உரங்களை பயன்படுத்திதான், இன்றைய காலகட்டத்தில் பயிர்கள் விளைவிக்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி பழமையான நெல் ரகங்கள் வெகுவாக குறைந்து விட்டதோடு, கம்பு, சோளம் உள்ளிட்ட தானிய பயிர்களும் மிக குறைந்த அளவே பயிரிடப்படுகிறது. இந்த நிலையில் மணப்பாறையை அடுத்த மரவனூர் அருகே உள்ள இடையபட்டி கள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன்.
கண்ணுடையான்பட்டி கிராம உதவியாளராக வேலை பார்த்து வரும் இவர், தன்னுடைய நிலத்தில் பழமையான மாப்பிள்ளை சம்பா நெல் பயிரிட்டு தற்போது அறுவடை செய்து வருகிறார். மாப்பிள்ளை சம்பா என்பது மிகவும் பழமையான நெல் வகையை சேர்ந்தது. அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
இயற்கை விவசாயம் செய்வது, பழமையான நெல்மணிகளை பயிரிடுவது போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்ட மகேந்திரன், ஒருவரிடம் மாப்பிள்ளை சம்பா நெல் விதைகளை வாங்கி பயிரிட்டார். இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வளர்க்கப்பட்டதுடன், அதிக மகசூலும் கிடைத்துள்ளது.
மேலும் இந்த நெல்லின் மகத்துவத்தை அனைவருக்கும் எடுத்துச் சொல்ல, தன்னுடைய தோட்டத்தில் விளைந்த மாப்பிள்ளை சம்பா அரிசியை சமைத்து, நண்பர்களுக்கு விருந்தும் வைக்கிறார். பழமையான நெல்வகைகளை மீட்டு எடுக்க நினைத்துள்ள மகேந்திரனின் செயல் அப்பகுதி விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.