கொரோனாவுக்கான மருந்து கண்டு பிடிப்பு குறித்து உறுதியான தகவல்கள் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்
திருச்சி: கொரோனாவுக்கான மருந்து கண்டுபிடிப்பு தொடர்பாக உறுதியான தகவல் எதுவும் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் விஜயபாஸ்கர் கூறியதாவது:
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் 600 படுக்கைகள் உள்ளன. இதனை தற்போது 1000 படுக்கைகளாக உயர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு ரெம்டிசிவியர், தோசிலிசுனாப் மருந்துகள் பாதுகாப்பானது இல்லை: ஐசிஎம்ஆர்!!
மருத்துவமனைகளில் படுக்கைகள்
தமிழகம் முழுவதும் 75,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. இதனை மேலும் அதிகரிக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 16 ,54,000 கொரோனா பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த சிகிச்சை
திருச்சி மாவட்டத்தில் மட்டும் 45,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அனைத்து உயிர் காக்கும் மருந்துகளும் தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, அலோபதி உள்ளிட்ட அனைத்து மருத்துவ முறைகளையும் இணைத்து ஒருங்கிணைந்த சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இறப்பு விகிதம் குறைவு
இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா இறப்பு வீதமானது குறைந்து வருகிறது. கொரோனா தொற்று குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கை தேவை. கொரோனா பாதிக்கப்பட்டவர் நமக்கு எதிரி அல்ல. ஆனால் கொரோனா வைரஸ் நமக்கு எதிரி.எனவே தொற்று பாதிக்கப்பட்டவரை அன்புடன் நடத்த வேண்டும்.
44 பரிசோதனை மையங்கள்
இந்திய அளவில் பிளாஸ்மா பரிசோதனை செய்வதற்கு 44 பரிசோதனை மையங்கள் அமைக்க ஐ.சி.எம்.ஆர் அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மண்டல அளவில் இருக்கக்கூடிய அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருக்கு நாளொன்றுக்கு நான்கு முதல் 60 லிட்டர் வரையிலான ஆக்சிஜன் தேவைப்படுகிறது. எனவே தேவையை கருத்தில் கொண்டு தற்போது High Flow nasal oxygen சிலிண்டர் புதிதாக அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனாவுக்கு மருந்து?
கொரோனாவிற்கு உலக அளவில் பல்வேறு நாடுகளில் மருந்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக தகவல் வருகின்றன. ஆனாலும் இது உறுதிப்படுத்தப்படவில்லை. மருத்துவ குழுவின் ஆலோசனைப்படியே தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார் அந்த வகையில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் பலன் கிடைத்து வருகிறது. இவ்வாறு விஜயபாஸ்கர் கூறினார்.