15 ஆண்டுகளுக்கு பின்.. மீண்டும் திருச்சியை திணறடிக்கும் வெள்ளம்.. முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
திருச்சி: வெளுத்து வாங்கும் கனமழையால் திருச்சியில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் அடுத்த சில நாட்களில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
திருச்சி
ஏற்கனவே, கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மலைக்கோட்டை நகரான திருச்சியில் கடந்த சில நாட்களாகக் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதனால் திருச்சியில் பல பகுதிகளில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் தேங்கிய மழை நீர் வடியாததால் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்,
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் திருச்சியில் 34 மிமீ மழை மட்டுமே பெய்தது. இருந்தாலும் கூட கருமண்டபம், பிராட்டியூர், தீரன் நகர், வயலூர் சாலை, உறையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் வடியவில்லை. இதனால் சில பகுதிகளில் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
இதுமட்டுமின்றி திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்துள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருவதால் திருச்சியில் செல்லும் பல்வேறு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடமுருட்டி ஆற்றில் சுமார் 25,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் உறையூர், வயலூர் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், மணப்பாறை & பொன்னியாற்றில் அதிகளவில் நீர் செல்வதால், அதன் உபரி நீரைப் பெறும் அரியாறும் நிரம்பி வழிகிறது. இதனால் தீரன் நகர் உட்பட சில பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
விளை நிலங்கள் நாசம்
மேலும், கோரையாற்றில் அதிகளவில் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அரியாறு கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிலிருந்து வெளியேறும் நீரால் விளை நிலங்கள் நாசமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதைச் சரி செய்யும் பணிகளில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.