கொட்டி தீர்த்த கனமழை... நிரம்பிய ஏரிகள்.... வெள்ளக்காடான திருச்சி!
திருச்சி: புரேவி புயல் காரணமாக திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி நகரம் முழுவதும் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புரேவி புயல் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. திருச்சியிலும் நேற்று முன்தினம் தொடங்கி கனமழை கொட்டி வருகிறது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
மத்திய, சத்திரம் பேருந்து நிலையங்கள், தில்லைநகா், அண்ணாநகா், உழவா் சந்தை, கண்டோன்மென்ட், உறையூா் உள்ளிட்ட பல பகுதிகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
உறையூர் சவுடேஸ்வரி அம்மன் கோவில் அருகே பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பளளத்தில் தேங்கி நின்ற மழைநீரில் பசுமாடு தவறி விழுந்து இறந்தது. மழையுடன் குளிர் காற்றும் வீசியதால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். திருச்சி புறநகர்ப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. சமயபுரம், மண்ணச்சநல்லூர், சிறுகனூர், எதுமலை, துறையூர் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பல்வேறு இடங்களில் குட்டைபோல மழைநீர் தேங்கி நின்றது. இதனை அகற்ற வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கப்பட்டனர். தா.பேட்டை அருகே துலையாநத்தம் புதுகாலனியில் ருக்மணி (வயது 80). என்பவரது வீட்டின் பக்கவாட்டு சுவர் மழையால் இடிந்து விழுந்தது. அவருக்கு அரசு சார்பில் இலவச சேலை, அரிசி, மண்எண்ணெய் ஆகியவற்றை வருவாய்த்துறையினர் வழங்கினர்.
புரேவி புண்ணியத்தால் கொட்டித்தீர்த்த கனமழை...எங்கெங்கு எவ்வளவு மழை அளவு தெரியுமா
இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டாலும், குளங்கள், ஏரிகள் நிரம்பி வருவது திருச்சி மாவட்ட விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறதுதிருச்சி ஜங்ஷன்- 33மி.மீ, திருச்சி மாநகரம் 33மி.மீ என மாவட்டம் முழுவதும் மொத்தம் 540 மி.மீ. மழை பதிவானது.