மணப்பாறையில் கனமழையால் பெருகிய வெள்ளம் : திருச்சி - திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
கனமழை வெள்ளம் காரணமாக திருச்சி திண்டுக்கல் சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி: மணப்பாறையில் நேற்று காலை 6 மணி முதல் 9 மணிவரை கொட்டித்தீர்த்த கனமழையால் அரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து உள்ளது. திருச்சி திண்டுக்கல் சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியில் அரியாறு தலைப்பு தொடங்குகிறது. அங்கிருந்து தொடங்கி பொன்னணியாறு அணை பகுதியில் இருந்து மணப்பாறை, பள்ளிவெள்ளி மூக்குஒடை பகுதியில் இருந்து வரும் அரியாறு, அரியாவூர் வழியாக புங்கனூர், தீரன்நகர் வழியாக கோரையாற்றில் இணைந்து காவிரியில் கலக்கிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் அரியாற்றில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாக தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அரியாற்றில் இருகரையை தொட்டு தண்ணீர் வந்தது. புங்கனூர்-தீரன்நகர் இடையே அரியாற்று நீர் கரைகளை கடந்து தண்ணீர் வெளியேறி ஊருக்குள் புகுந்தது. இதனால் இனியானூர் கிராமத்தில் அரியாற்று கரையோர பகுதியில் சுற்றியுள்ள குடியுருப்புகளில் தண்ணீர் சூழ்ந்தது.
இதில் இனியானூர், பிராட்டியூர் மேற்கு பகுதியில் உள்ள முருகன் நகர், வர்மா நகர் தெற்கு ஆகிய பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் சூழ்ந்தது. திடீரென வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீரால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். திருச்சி-திண்டுக்கல் சாலையில் பிராட்டியூர் முதல் தீரன்நகர் வரை சாலையை மூழ்கடித்து தண்ணீர் சென்று கொண்டிருந்தது இதன் காரணத்தினால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு இருந்தது.
திருச்சி மாநகரில் உய்யக்கொண்டான், கோரையாற்றிலும் அதிகளவு தண்ணீர் வந்ததால், வயலூர் சாலையில் சண்முகாநகர், குமரன்நகர், உறையூர் பகுதிகளில் மழைநீர் வீடுகளில் புகுந்தது. இதனிடையே மணப்பாறையில் நேற்று காலை 6 மணி முதல் 9 மணிவரை கொட்டித்தீர்த்த கனமழையால் அரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து உள்ளது.
திருச்சி திண்டுக்கல் சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் பகுதியில் உள்ள இரண்டு தரைப்பாலங்கள் மூழ்கி நீர் முழுவதுமாக வெளியேறியதால் போக்குவரத்து முழுமையாக தடைபட்டது.
வங்கக் கடலில் உருவாகும் ஜவாத் புயல் எங்கே போகுது பாருங்க.. தமிழ்நாட்டுக்கு மழை வருமா?
மணப்பாறை ராஜிவ் நகரில் உள்ள அப்புஅய்யர் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது. மணப்பாறை பஸ் நிலையம் முன்பு சுமார் 3 அடி உயரம் வரை தண்ணீர் ஓடியது. கடைகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியதால் போக்குவரத்து முழுமையாக தடைபட்டது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மணப்பாறை பேருந்து நிலையத்தில் மழைநீர் அதிக அளவில் தேங்கி பஸ்நிலையத்துக்குள் பஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பேருந்துகள் அனைத்தும் திண்டுக்கல் சாலை, திருச்சி சாலை, கோவில்பட்டி சாலை, மதுரை சாலை உள்ளிட்ட சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தி பயணிகள் ஏற்றிச் செல்லப்பட்டனர். இதனால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.