இந்தி திணிப்பு என்பது கந்தக கிடங்கில் தீ வைப்பது போல.. திருச்சி சிவா ‘திகுதிகு’
திருச்சி: தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு என்பது கந்தக கிடங்கில் தீ வைப்பதுபோல் என திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரான திருச்சி சிவா எச்சரித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்க்க திமுக என்ன விலை கொடுக்கவும் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்தி மொழி பேசாத மாநிலங்களில் பள்ளிக்கூடங்களில் மும்மொழி கொள்கையை கொண்டுவர கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரையை செயல்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
ஏற்கனவே ஊர் பெயர் பலகைகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள எல்லைக்கற்களில் இந்தி மொழியில் எழுதும் பணியை மேற்கொண்டது மத்திய அரசு. இதற்கு பெரும் எதிர்ப்பு எழுந்ததோடு அந்த பெயர்கள் கருப்பு மையால் அழிக்கப்பட்டன.
இந்திக்கு எதிர்ப்பு
இந்நிலையில் மீண்டும் இந்தி மொழி திணிப்பில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு திமுக, மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
திருச்சி சிவா எதிர்ப்பு
திருச்சி விமான நிலையத்தில் திமுக எம்பியான திருச்சி சிவா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்தி திணிப்பு தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு திருச்சி சிவா அளித்த பதில், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை கட்டாயப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என சொல்கிறார்கள்.
எதிலும் கை வைக்க முடியாது
அதேபோல் இந்தி பேசும் மாநிலங்களில் தென்னிந்திய மொழிகளை அல்லது வேறு மாநில மொழிகளை சொல்லித் தருவார்களா என்று அதில் குறிப்பிடப்படவில்லை.
அறிஞர் அண்ணா சட்டசபையில் இருமொழிக் கொள்கையை கொண்டு வந்தபோது இந்த அண்ணா இல்லாவிட்டாலும் அண்ணா கொண்டுவந்த எதிலும் எவராலும் யாரும் கை வைக்க முடியாது என்றார்.
உயிர்த்துடிப்புடன் தான் உள்ளது
எது நடந்தாலும் சரி தமிழகத்தில் இருமொழி கொள்கை என்பதில் மாற்றமில்லை. திமுக ஒரு காலத்தில் மொழிக்காக நடத்திய போராட்டம் இன்னும் உயிர்த்துடிப்புடன் தான் உள்ளது. இதுவரை மறைமுகமாக இந்தியை திணித்து வந்த மத்திய அரசு தற்போது நேரடியாக திணிக்க தொடங்கியுள்ளது.
மாநிலங்களவையில் 22 மொழிகள்
அதனால் நாங்களும் நேரடியாக போராடத் தயாராகிவிட்டோம். மாநிலங்களவையில் 22 மொழிகளில் உரையாற்றலாம் என அறிவிக்கப்பட்டிருகின்றது, தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளை ஆட்சி மொழியாக வலியுறுத்தி வருகிறோம், இதற்காக தனி நபர் மசோதா கூட கொண்டு வந்துவிட்டோம்,
என்னவிலை கொடுக்கவும் தயார்
தமிழகத்தில் எந்த காலத்திலும் எப்போதும் இந்தி மொழி வர முடியாது. இதை சவாலாகவே சொல்கிறோம். இந்தி திணிப்பை எதிர்க்க திமுக என்ன விலை கொடுக்கவும் தயாராகவுள்ளது.
கந்தக பூமியில் தீ வைப்பது
இந்தி மொழியை எதிர்க்க திமுக, தமிழ்நாட்டு மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் தயாராக உள்ளனர். தமிழகத்தில் இந்தி மொழி திணிப்பு என்பது கந்தக பூமியில் தீ வைப்பது போன்றது. இந்தி மொழிக்கு எதிராக கடந்த காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களை ஆட்சியாளர்கள் ஒரு முறை திரும்பி பார்க்கவேண்டும். இவ்வாறு திமுக எம்பி திருச்சி சிவா கூறினார்.