இரவோடு இரவாக, போஸ்ட் ஆபீஸ், பிஎஸ்என்எல் ஆபீசில் ஹிந்தி எழுத்துக்கள் அழிப்பு.. திருச்சியில் பரபரப்பு
திருச்சி: திருச்சி தபால் அலுவலகம் மற்றும் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் ஹிந்தி எழுத்துக்கள், கருப்பு மை பூசிய அழிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் மும்மொழி கல்வித் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கஸ்தூரிரங்கன் கமிட்டி மத்திய அரசுக்கு சமீபத்தில் ஒரு பரிந்துரையை சமர்ப்பித்திருந்தது.
தமிழகத்தை பொறுத்த அளவில், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழி கல்வி திட்டம் அமலில் உள்ளது. ஆனால், மொழி பாடத்திட்டம் என்பது மூன்றாவது மொழியாக, ஹிந்தியையும் கட்டாயமாக படிக்கவேண்டும் என்ற பரிந்துரையை கொண்டதாகும்.
"வேண்டும்.. வேண்டும்.. நீங்கள் வேண்டும்" கோஷங்களால் ராகுலை திக்குமுக்காட வைத்த வயநாட்டு மக்கள்
இது ஒரு வகையில் ஹிந்தி திணிப்பு என்று கூறி தமிழகம் உள்ளிட்ட, தென் மாநில அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மூன்றாவது மொழியாக ஹிந்தி மட்டுமே இன்றி, வேறு பிராந்திய மொழிகளையும் விருப்ப மொழிப் பாடமாக அறிமுகம் செய்யலாம் என்று மத்திய அரசு ஆலோசனை தெரிவித்துள்ளது.
இருப்பினும், மும்மொழி பாடத்திட்டம் என்பது மாணவர்களுக்கு கூடுதல் சுமையை கொடுக்க கூடியது என்பதும், பிராந்திய மொழிகளை விட ஹிந்தியை தான் அதிகம் பேர் படிக்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலை ஏற்படும் என்ற நடைமுறை விஷயமும் இந்த பரிந்துரைக்கு எதிராக தமிழக அரசியல்வாதிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்த நிலையில் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள, தபால் அலுவலகத்தின் வெளியே தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்த வாசகங்களில், ஹிந்தி மொழி வாசகத்தை மட்டும் யாரோ நள்ளிரவில் கருப்பு மை பூசி அழித்துள்ளனர்.
இதேபோன்று, அருகே உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தின் வெளியே இருந்த ஹிந்தி எழுத்துக்களும் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரை தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மை பூசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்க இதுபோன்று கருப்பு மை பூசப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகப்படுகிறார்கள்.