வீரமணி பங்கேற்ற கூட்டத்தில் இந்து முன்னணியினர் சரமாரி தாக்குதல்.. கற்கள், செருப்பு வீச்சு.. பதற்றம்
Recommended Video
திருச்சி: தி.க. தலைவர் கி.வீரமணி பங்கேற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இந்து முன்னணியினர் சரமாரி தாக்குதலை நடத்திய சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ண பகவானை, பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துடன் இணைத்து வீரமணி பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது இந்துக்களிடையே குறிப்பாக இந்து அமைப்பினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திராவிடர் கழகம், இத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதால், திமுகவுக்கு இந்துக்கள் ஓட்டு போட கூடாது என்ற பிரச்சார வாசகங்களுடன் வீரமணி பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
செருப்பு வீச்சு
இந்த நிலையில்தான், நேற்று இரவு அந்த அடிதடி பரபரப்பு சம்பவம் திருச்சியில் நடைபெற்றுள்ளது. திமுக கூட்டணி, காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து, திருச்சி கீரக்கொள்ளை பகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கற்க வந்திருந்தார் வீரமணி. வீரமணி மேடைக்கு வருவதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர்கள் பிரச்சார மேடையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கே வந்த இந்து முன்னணியினர், இந்துக்களையும், இந்து கடவுள்களையும் அவமானப்படுத்தியா பேசுகிறீர்கள் என கூறி, சரமாரியாக மேடையை நோக்கி செருப்பை வீசியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மு.க.ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு.. கோவை போலீஸ் அதிரடி
கற்கள்
இதையடுத்து வீரமணி மேடைக்கு வந்துள்ளார். அவர் பேசி முடித்து கீழே இறங்கினார். அப்போது எங்கிருந்தோ சரமாரியாக மேடை நோக்கி கற்கள் பாய்ந்து வந்தன. இதில் மேடையில் இருந்த காட்டுரை சேர்ந்த தி.க.க்காரர் ஒருவரும், வீரமணியுடன் இருந்த குணசேகரன் ஆகியோரும் காயமடைந்தனர். இதையடுத்து, கீழே இருந்த நாற்காலிகளை எடுத்து மேடை மீது வீசினர் இந்து முன்னணியினர்.
போலீஸ் பாதுகாப்பு
பதிலுக்கு திகவினர் நாற்காலிகளை வீசினர். இதனால் அந்த இடம் போர்க்களம் போல காட்சியளித்தது. இதற்கு இடையே வீரமணி தனது காரில் ஏறி கிளம்ப முயன்றார். ஆனால், அவரின் காரை இந்து முன்னணியினர் வழிமறித்தனர். வீரமணி மீது தாக்குதல் நடைபெறும் சூழல் உருவானதை உணர்ந்த காவல்துறையினர் ஓடிச் சென்று, அவரை பாதுகாப்பாக அனுப்பி வைத்துவிட்டு, வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.
இந்துமுன்னணியை சேர்ந்த மணிகண்டன், போத்தராஜ் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீரமணி பாதுகாப்பு
இந்த சம்பவம் தொடர்பாக, திராவிடர் கழகத்தின் சார்பில் காந்திமார்கெட் காவல்நிலையத்தில் புகார் செய்து கொண்டிருக்கிறார்கள். வீரமணியை திக தொண்டர்கள் பத்திரமாக பெரியார் மாளிகைக்கு அழைத்து சென்றுவிட்டனர்.