லலிதா ஜுவல்லரி கொள்ளையை கண்டுபிடித்த அதே நாய்.. பெல் வங்கி கொள்ளை எப்படி நடந்தது? திடுக் பின்னணி!
திருச்சி: திருச்சி பெல் நிறுவன கூட்டுறவு வங்கி கொள்ளை எப்படி நடந்தது என்று முழு விபரம் தற்போது வெளியாகி உள்ளது.
திருச்சி பெல் நிறுவன தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ.1.50 கோடி பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது. திருவெறும்பூரில் இந்த பெல் நிறுவனம் இருக்கிறது. பெல் நிறுவனத்திற்குள் இருக்கும் வங்கியில்தான் இந்த கொள்ளை நடந்துள்ளளது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். லலிதா ஜுவல்லரி கொள்ளையை தொடர்ந்து திருச்சியில் அடுத்த சம்பவம் நடந்து உள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொள்ளை எப்படி
இந்த கொள்ளை நடந்தது எப்படி என்று முழு விபரத்தையும் தற்போது போலீசார் வெளியிட்டு இருக்கிறார்கள். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதன்படி நேற்று இரவு 10 மணி வாக்கில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
நேற்று மாலை
நேற்று மாலை அந்த கூட்டுறவு வங்கியில் பணம் போடப்பட்டுள்ளது. இன்று மாதத்தில் முதல் நாள் என்பதால் பெல் ஊழியர்களுக்கு சம்பளம் வரும். அதை பலர் வங்கியில் இருந்து எடுப்பார்கள் என்பதால், வங்கியில் லாக்கரில் பணம் நிரப்பப்பட்டு இருக்கிறது.
கொள்ளை விஷயம்
இந்த விஷயம் கொள்ளையர்களுக்கு தெரிந்துதான் லாக்கரில் இருந்து கொள்ளையடித்து இருக்கிறார்கள். ஒருவர் நேற்று இரவு ஜன்னலை உடைத்து உள்ளே வந்து பணத்தை எடுத்து இருக்கிறார். இன்னொருவர் வெளியே இருந்து பணப்பெட்டியை வாங்கி இருக்கிறார்கள்.
காரில் சென்றனர்
பின்னர் இவர்கள் இருவரும் காரில் தப்பித்து சென்று இருக்கிறார்கள். தற்போது இந்த காரை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. காரின் அடையாளத்தை வைத்து போலீசார் திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஹைவே கேமராக்களை ஆராய்ந்து வருகிறார்கள்.
லலிதா ஜுவல்லரி
அதேபோல் லலிதா ஜுவல்லரில் கொள்ளை வழக்கை கண்டுபிடித்த மோப்ப நாய் இதிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. கொள்ளையர்கள் தவறி விட்டுச்சென்ற தடயங்கள் சிலவும் கிடைத்துள்ளது. மோப்ப நாய் உதவியுடன் தற்போது தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.