திருச்சியில் திக்.. திக்.. சுற்றுச்சுவரை உடைத்தும் பெரும் விபத்திலிருந்து விமானம் தப்பியது எப்படி?
திருச்சி: சுற்றுச்சுவரை உடைத்து கொண்டு பறந்த போதிலும் பெரும் விபத்திலிருந்து விமானம் தப்பியது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தினமும் அதிகாலை 1.15 மணிக்கு புறப்பட்டு துபாய்க்கு செல்லும். அங்கிருந்து நள்ளிவரவு 12 மணிக்கு வந்த இந்த விமானம் நேற்று அதிகாலை 1.15 மணிக்கு துபாய் புறப்பட தயாரானது. அப்போது அதில் 130 பயணிகள் ஏறி அமர்ந்தனர்.
இந்த விமானம் புறப்பட தயாரான போது சுற்றுச்சுவர் ஆண்டனா மீது மோதியதில் விமானத்தில் அடிபாகம் உடைந்து சேதம் அடைந்தது. சுற்றுச்சுவரில் இருந்த கம்பி வலை விமானத்தின் சக்கரத்தில் சிக்கி இருந்தது.
விமானிக்கு தெரியவந்தது
இதே நிலையில் மஸ்கட் நகர் எல்லைக்குள் சென்ற விமானத்தை அதிகாரிகள் மும்பையில் இறக்குமாறு கட்டளையிட்டனர். மும்பை விமான நிலையத்தில் இறக்கிய போதுதான் விமானம் சுற்றுச்சுவரில் இடித்தது விமானிக்கு தெரியவந்தது.
கவனக்குறைவா
இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விமானத்தில் சக்கரங்கள் மட்டுமே மோதியதால் பெரிய அளவில் பாதிப்பில்லை. விமானத்தின் உடற்பகுதி மோதியிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். விமானம் சுற்றுச்சுவரில் மோதியதற்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இல்லை, கவனக்குறைவுதான் காரணம்.
விமான அதிகாரிகள்
இந்நிலையில் விமான விபத்து குறித்து சில பரபரப்பு தகவல்கள் வெளியாகின. ஓடுபாதையில் இருந்து குறிப்பிட்ட தூரம் வந்ததும் விமானம் மேலே பறக்க தயாராகிவிடும். இந்த குறிப்பிட்ட தூரத்தையும் தாண்டி விமானம் பறந்ததால் தான் சுற்றுச்சுவரில் சக்கரங்கள் மோதியதாக விமான அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பையில் தரையிறக்கம்
விமானத்தின் சக்கரம் மற்றும் டயர்கள் சேதம் அடைந்திருந்ததால் வெளிநாட்டில் அதனை தரையிறக்கும்போது பல சட்ட சிக்கல்கள் எழும். இதனால்தான் துபாயில் தரையிறக்குவதற்கு முன்னர் மும்பையில் தரையிறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
விசாரணை
விமானம் மோதியதில் ஆண்டனா கருவிகள் மற்றும் சுற்றுச்சுவர் சேதம் அடைந்தது பற்றி விமானிக்கு கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் கொடுக்கப்பட்டும் துபாயில் தரையிறக்குவதிலேயே குறியாக இருந்தார். விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டதும் விமானி கணேஷ்பாபுவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சீரமைக்கும் பணி
அப்போது விமானம் தாழ்வாக பறக்கும்படி இயக்கியது ஏன் என்று கேட்டு விசாரணை நடத்தினர். விமானத்தின் சக்கரங்கள் சுற்றுச்சுவரில் மோதிய போது அதன் மேல் பகுதியில் இருந்து கம்பி வலையின் ஒரு பகுதி தேசிய நெடுஞ்சாலையில் விழுந்து உள்ளது. இன்னொரு பகுதி சக்கரத்தில் சிக்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது. சேதம் அடைந்த ஐ.எல்.எஸ். கருவிகளை சீரமைக்கும் பணி முடிவடைய 20 நாட்கள் ஆகுமாம்.